பழனியில் தம்பதி தூக்குபோட்டு தற்கொலை : 10 பேரின் பெயரை குறிப்பிட்டு எழுதிய கடிதம் சிக்கியது.. போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
22 November 2022, 9:30 pm
Quick Share

திண்டுக்கல் ; பழனியில் கேரள தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பல்லுரித்தி கிராமத்தை சேர்ந்தவர்கள் ரகுராம்(46) – உஷா(44) தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில்,நேற்று பழனிக்கு வந்த இருவரும் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.

நேற்று அறைக்கு சென்றவர்கள் இன்று மாலை 5 மணி ஆகியும், அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் அடிவாரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விடுதிக்கு வந்த போலீசார் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ரகுராம், உஷா ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது‌.

இதனையடுத்து, இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அறையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் சிறிய விஷயத்திற்காக 10 பேர் கொண்ட நபர்கள் தங்களை நீதிமன்றம் வரை அழைத்துச் சென்றதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தங்களுடைய தற்கொலைக்கு இந்த 10 பேர் தான் காரணம் என்றும், கேரளாவில் உள்ள பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் எங்களுடைய மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீதி கிடைக்க பாடுபட வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 415

0

0