‘மக்கள் தேவைக்கு இல்ல… நான் முடிவெடுக்கனும்’… அதிமுக கவுன்சிலர் கொண்டு வந்த திட்டத்தை தடுத்து நிறுத்திய ஊராட்சிமன்ற திமுக தலைவர்!

Author: Babu Lakshmanan
22 December 2022, 2:14 pm
Quick Share

கன்னியாகுமரி ; அதிமுக ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினரின் முயற்சியால் வந்த நிதியில் நடைபெற்ற வளர்ச்சிப் பணியை திமுக ஊராட்சி தலைவர் தடுத்து நிறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடிக்காரன் கோணம் ஊராட்சியின் தலைவராக திமுக ஒன்றிய செயலாளர் பிராங்கிளின் செயல்பட்டு வருகிறார். அதே பகுதிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய வார்டில் யூனியன் கவுன்சிலராக செயல்பட்டு வருபவர் அதிமுகவை சேர்ந்த மேரிஜாய்.

மேரி ஜாயின் முயற்சியால் ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து மூன்று லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து கடிகாரம் கோணம் சந்தையில் மேற்கூரை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தனது விருப்பத்திற்கு மாறாக பணி நடைபெறுவதால் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் ஊராட்சி தலைவர் பிராங்கிளின் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் பணியை மேற்கொண்டு செய்ய முடியாமல், மேற்கூரை அமைக்கும் பணியை தொழிலாளர்கள் பாதியில் நிறுத்தி விட்டு சென்றனர். இந்த நிலையில், பணியாளர்களுடன் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி தலைவர் பிராங்கிளின் நீண்ட நேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

ஏற்கனவே, நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவரின் கன்னத்தில் பிராங்கிளின் அறைந்த காட்சி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த வீடியோவும் வைரலாகிறது.

Views: - 816

0

0