விஸ்வரூபம் எடுக்கும் பரந்தூர் விமான நிலைய விவகாரம் : ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட குழு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 October 2023, 11:26 am
Paranthoor- Updatenews360
Quick Share

விஸ்வரூபம் எடுக்கும் பரந்தூர் விமான நிலைய விவகாரம் : ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட குழு!!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துார் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் காஞ்சிபுரம் தாலுகாக்களில் 20 கிராமங்களில், 5,700 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது.

புதிய பசுமை விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் சுற்றியுள்ள 13 கிராமங்களில், 5,700 ஏக்கர் நில எடுப்பு பணிகளுக்கு, இரண்டு மாவட்ட வருவாய் அலுவலர்கள், இரண்டு துணை கலெக்டர்கள், தாசில்தார்கள் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட 326 பேர் நியமிக்கவுள்ளதாகவும், வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கான அறிவிப்பு, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானதில் இருந்தே, விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாகவே, விமான நிலையம் அமைய உள்ள பிரதான பகுதியான ஏகனாபுரம் கிராமத்தில், 456 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏகனாபுரம் தவிர மற்ற கிராமத்தினர், நேரடி போராட்டம் நடத்தாமல், தங்கள் எதிர்ப்பை மறைமுகமாக தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, விமான நிலையம் அமையும் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையிலான குழுவினர், இரண்டு முறை ஆய்வு செய்துள்ளனர்.

இந்நிலையில், விமான நிலையம் அமைய இருக்கும் 20 கிராமங்களில், நிலம் கையகப்படுத்தும் பணியை, அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இதற்கான நிர்வாக அனுமதியை, தமிழக அரசு அடுத்த சில நாட்களில் வழங்க இருப்பதாக, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக, நஞ்சை நிலம் 2,667 ஏக்கர், தரிசு 959 ஏக்கர்; மாணாவாரி 18 ஏக்கர், நத்தம் 88 ஏக்கர், அரசு நிலம் 1,995 ஏக்கர் நிலம் என மொத்தம் 5,727 ஏக்கர் நிலங்களை, அதிகாரிகள் கையகப்படுத்த உள்ளனர்.

இதற்காக, இரண்டு மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், அவர்களின் கீழ் 300க்கும் மேற்பட்டோர் செயல்படுவர் எனவும், வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அரசு நிலங்கள் தவிர, பட்டா, விவசாய நிலங்களை கையகப்படுத்தி, அதற்கான இழப்பீடு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

நிலங்களுக்கான மதிப்பில், நில எடுப்பு சட்டப்படி, 275 மடங்கு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்.

அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க, இரண்டு மாவட்ட வருவாய் அலுவலர்கள், துணை கலெக்டர்கள், தாசில்தார்கள், வருவாய் உதவியாளர்கள் என, பெரிய குழு நியமிப்பதற்கான பணி நடந்து வருகிறது. மொத்தம் 326 பேர், நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.

அரசின் அனுமதி கிடைத்தவுடன், நில எடுப்புக்கான அலுவலகங்கள் காஞ்சிபுரத்தில் அமைக்கப்படும். தொடர்ந்து, விமான நிலையத்துக்கான பணிகள் வேகமெடுக்கும்.

நில எடுப்பு அலுவலகங்கள் புதிதாக அமைவது மட்டுமல்லாமல், விமான நிலையம் அமைவதற்கான தனி அலுவலகமும் அமைக்கப்பட உள்ளது. அதிலும், வருவாய் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த தகவல்களை கேள்விப்பட்ட விமான நிலைய எதிர்ப்பு குழுவினர், 456 வந்து நாளாக போராட்டம் நடத்தி வரும் மக்களைப் பற்றி சற்றும் கவலைப்படாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், விமான நிலையம் அமைய முனைப்பு காட்டி வரும் தமிழக அரசை கண்டித்தும் 13 கிராமங்களை சேர்ந்த புதிய விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு போராட்டக் குழுவின் முன்னணி நிர்வாகிகள் 20 மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 353

0

0