இடுப்பளவு தண்ணீரில் உடலை சுமந்து சென்ற மக்கள்… பலமுறை சாலை வசதி கேட்டும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் அலட்சியம் என புகார்..!!

Author: Babu Lakshmanan
16 August 2023, 12:59 pm
Quick Share

திண்டுக்கல் அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முறையான சாலை வசதி இல்லாததால், நீரோடையில் இடுப்பளவு தண்ணீரில் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்யும் அவலம் அரங்கேறியுள்ளது.

திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடி கிராமம், செட்டியபட்டியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் எவரேனும் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டால், அருகிலுள்ள சந்தனவர்த்தினி ஆற்றுப்படுகை ஓரமாக இருக்கக் கூடிய இடுகாட்டில் அவர்களை அடக்கம் செய்வது வழக்கம்.

இடுகாட்டிற்கு செல்லக்கூடிய பகுதி முழுவதும் முட்கள் நிறைந்தும், மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பியும் இருப்பதால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வந்தனர். சுடுகாட்டிற்கு செல்வதற்கு பாதை தொடர்பாக பலமுறை திமுக ஊராட்சி மன்ற தலைவர் மாதவி காமராஜிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த சூழலில், கணேசன், சுந்தரம் என்பவரின் தாயார் அழகம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். அழகம்மாளை அடக்கம் செய்வதற்காக அருகிலுள்ள சுடுகாட்டிற்கு பாதை இல்லாத நிலையில், நேற்று முன்தினம் பெய்த கனமழையால் சந்தனவர்தினி ஆற்று படுகை ஓரமாக உள்ள குளத்து கரை முழுவதும் இடுப்பளவு தண்ணீரில் அழகம்மாளின் உடலை மகன்கள் மற்றும் உறவினர்கள் சுமந்து சென்று அடக்கம் செய்த அவல நிலை ஏற்பட்டது.

இறந்தும் சுடுகாட்டிற்கு நிம்மதியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை நினைத்து வேதனை அடைவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

Views: - 185

0

0