விளக்குகளால் ஜொலித்த கோவை பேரூர் படித்துறை.. “நொய்யல்” என்ற வடிவில் ஜொலித்த தீபங்களால் பக்தர்கள் நெகிழ்ச்சி..!!

Author: Babu Lakshmanan
6 December 2022, 9:59 pm
Quick Share

கோவை : கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி பேரூர் படித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்குகளை ஏற்றி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் ஜொலிக்க வைத்தனர்.

இன்று கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுவதை ஒட்டி கோவில்கள் இல்லங்களில் கார்த்திகை தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. இன்று மாலை திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்பட்டதையடுத்து, தமிழகம் தோறும் உள்ள கோவில்கள் இல்லங்களில் கார்த்திகை தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

இந்நிலையில், கோவையில் உள்ள கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், பேரூர் படித்துறையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்குகளை ஏற்றி படித்துறையை ஜொலிக்க செய்தனர். கோவையில் முக்கிய ஆறாக விளங்கு கூடிய நொய்யல் ஆறு முக்கியம் என்பதை எடுத்துரைக்கும் வகையில், “நொய்யல்” என எழுத்து வடிவில் தீபங்களால் வடிவமைத்தது அங்கு வந்த அனைவரையும் கவர்ந்தது.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கடந்த பல வருடங்களாக கோவை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை தூய்மைப்படுத்துவது, ஆற்றங்கரை பகுதிகளில் மரம் நடுவது போன்ற செயல்களை முன்னெடுத்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசிய கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், இந்த நொய்யல் ஆறு மிக முக்கியமான ஆறாக விளங்குவதாகவும், அடுத்த தலைமுறையினருக்கு இந்த ஆறு மிக முக்கியமானது எனவும் தெரிவித்தார்.

ஆறுகளை வழிப்படும் முறைகள் பழங்காலம் தொட்டே இருந்து வருவதால் கார்த்திகை தீபத்திருநாள் ஆன இன்று பேரூர் படித்துறையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்த்திகை தீப விளக்குகளை ஏற்றி நொய்யல் ஆற்றை வழிபட்டதாக தெரிவித்தார்.

Views: - 508

0

0