‘இருந்தாலும் இவ்வளவு தைரியம் ஆகாது’…காவலர் குடியிருப்பில் புகுந்து கைவரிசை காட்டிய போலீஸ்: உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கம்பி எண்ணும் அவலம்..!!

Author: Rajesh
14 March 2022, 6:48 pm
Quick Share

கோவை அவினாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் காவலர் குடியிருப்பு. இங்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மர்ம ஆசாமி ஒருவர் பூட்டியிருந்த 4 வீடுகளை நோட்டமிட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணம் மற்றும் லேப்டாப் செல்போன் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் கைவரிசை காட்டிய கிருஷ்ணகிரி மாவட்ட கல்லாவியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை ஊத்தங்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செந்தில்குமார் போலீஸ்காரராக பணியாற்றி வந்ததும் கடந்த 2009ம் ஆண்டில் பணியில் இருந்து ஒரு இன்ஸ்பெக்டர் ஒருவரை பழிவாங்கும் நோக்கில் ஆயுதப்படை வாகனத்தை கடத்திச் சென்று ஏரியில் தள்ளிவிட்ட வழக்கில் கைதாகி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்து லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் ஓட்டிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் அந்த வேலையும் அவருக்கு பறிபோனது. இதனை தொடர்ந்து தான் செந்தில்குமார் பணத்திற்காக போலீசாரின் வீடுகளை நோட்டமிட்டு தன்னை போலீஸ் என்று கூறி பல்வேறு இடங்களில் கைவரிசை காட்ட தொடங்கினார்.

இதில் தற்போது கிருஷ்ணகிரியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் கைவரிசை காட்டிய போது ஊத்தங்கரை போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கோவை காவலர் குடியிருப்பில் நகை, பணம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து ஊத்தங்கரை போலீசார் கோவை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று செந்தில்குமாரை காவலில் எடுத்து கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் நகைகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் செந்தில்குமார் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருடியதும், போலீஸ்காரர் போல் இருப்பதால் சந்தேகப்பட மாட்டார்கள் என்று இதுபோன்ற திருட்டுகளில் தொடர்ந்து ஈடுபட்டதும் தெரிய வந்தது.

Views: - 824

0

0