புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் கேரள லாட்டரி விற்பனை… தந்தை, மகன் உள்பட 4 பேர் கைது… செல்போன், கம்ப்யூட்டர் பறிமுதல்..!!

Author: Babu Lakshmanan
16 April 2022, 5:52 pm
Quick Share

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் ஆன்லைன் மூலம் கேரளா லாட்டரி விற்பனை செய்த தந்தை,மகன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை மூகாம்பிகை நகரில் முருகன் கோவில் அருகே ஆன்லைன் மூலம் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.

அப்போது, 4 பேர் கொண்ட கும்பல் லேப்டாப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் கேரள லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்ததை கண்டனர். உடனே போலீசார் அவர்கள் 4 பேரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் நாவற்குளம் குளத்துமேட்டு தெருவை சேர்ந்த பாஸ்கர் என்ற ஆறுமுகம்(49), இவரது மகன் ஈஸ்வர் (20), லாஸ்பேட்டை குறிஞ்சிநகர் மெயின் ரோட்டை சேர்ந்த மதிவாணன்(34) மற்றும் அரிபிரசாந்த்(27) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாட்டரி விற்பனை பணம் ரூ.24 ஆயிரம் மற்றும் செல்போன்கள், கம்ப்யூட்டர், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Views: - 981

0

0