சொல்ல சொல்ல கேட்காத கணவர்… திருமண நாளில் நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை ; திருவள்ளூரில் நிகழ்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
31 July 2023, 3:58 pm
Quick Share

செங்குன்றம் அருகே முதல் திருமண நாளில் நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த தண்டல்கழனி பகுதியை சேர்ந்தவர் அமிர்தகுமார். இவர் டிடிஎச் டிஷ் அமைக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நிவேதா (19) 9 மாதங்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.

நேற்று இவர்களுக்கு முதலாம் ஆண்டு திருமண நாள். திருமண நாளுக்கு வாழ்த்து சொல்வதற்காக அமிர்தகுமாரின் சகோதரி மெர்சி நேற்று மாலை இவர்களது வீட்டிற்கு வந்த போது, நிறைமாத கர்ப்பிணியான நிவேதா தூக்கிட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நிவேதாவை மீட்டு பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து, சடலத்தை கைப்பற்றிய செங்குன்றம் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் திருமண நாளான நேற்று தமது கணவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியும், அதனை மீறி அமிர்தகுமார் வேலைக்கு சென்றதால் மன உளைச்சலில் இருந்த நிவேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

திருமண நாளில் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியும் கணவர் கேட்காததால் நிறைமாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 350

0

0