கருவை கலைக்க மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி பரிதாப பலி : சிக்கிய பிரபல தனியார் மருந்தகம்!!
Author: Udayachandran RadhaKrishnan24 பிப்ரவரி 2022, 5:14 மணி
கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் அருகே கீழ்ப்பாடியில் தனியார் மெடிக்கலில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கீழ்ப்பாடி கிராமத்தை சேர்ந்த சின்னதம்பி. இவரது மனைவி செல்வி (25 வயது). இவர்களுக்கு திருமணம் ஆகிய ஏழு வயதில் ஒரு மகள்,மூன்று வயதில் ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் செல்வியின் கணவர் சின்னதம்பி பெங்களூரில் கூலி வேலை செய்து அடிக்கடி சொந்த கிராமத்திற்க்கு வந்து செல்வார் .இந்த நிலையில் செல்வி 5 மாத கர்ப்பிணி இருந்த நிலையில் சூளாங்குறிச்சி மணிமுத்தாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோதனை செய்ததில் குழந்தை இருதய குறைபாடு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இவர்கள் பல்வேறு மருத்துவமனைக்கு கருக்கலைப்பு செய்ய சென்றுள்ளனர் ஆனால் அவர்கள் செய்யவில்லை. இந்நிலையில் சொந்த ஊரான கீழ்ப்பாடி கிராமத்தில் உள்ள நியு ரோஷிதா மெடிக்கல் நடத்தி வந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான மெடிக்கலில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி 5 மாத கர்ப்பிணி பெண் செல்வி (25 வயது) சாப்பிட்டு உள்ளார். இதில் உதிரப் போக்கு ஏற்ப்பட்டு சுய நினைவு இல்லாமல் இருந்துள்ளார்.
பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு காரில் கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார். பின்னர் இதுகுறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். 5 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..
0
0