கத்தி முனையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை: ஆண் நண்பர் உள்பட 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை..!

Author: Vignesh
17 December 2022, 10:25 am
harassment-updatenews360
Quick Share

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்தி முனையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சுற்றியுள்ள பகுதியில் 5 தொழில் பூங்காக்கள் உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் ஸ்ரீபெரும்புதூர் சுற்று வட்டார பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் தமிழக போலீஸ் துறை கட்டுப்பாட்டில் உள்ள காவலன் செயலியில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் விவரம் வருமாறு:-

ஸ்ரீபெரும்புதூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் தங்கி ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறேன். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது ஆண் நண்பருடன் சென்று ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உணவு சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு நடந்து வந்தேன்.

அப்போது பின்தொடர்ந்து வந்த 2 பேர் கத்தி முனையில் மிரட்டி ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் செல்லும் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பாக அந்த பெண்ணின் ஆண் நண்பர் உள்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புகார் அளித்த பெண்ணுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ், ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 311

0

0