ஆளில்லா வீடுகளை நோட்டமிடும் மர்மநபர்கள்…அடுத்தடுத்து வீடுகளில் கைவரிசை: நள்ளிரவு கொள்ளையர்களால் அச்சத்தில் திண்டுக்கல் மக்கள்..!!

Author: Rajesh
17 May 2022, 1:45 pm
Quick Share

திண்டுக்கல்: அடுத்தடுத்து வீடுகளில் நடந்த தொடர் கொள்ளையால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

திண்டுக்கல் MVM நகர் ராமசாமி காலனி 7வது தெருவில் வழக்கறிஞர் ஆரோக்கிய அருள்சாமி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றுள்ளார். வீடு பூட்டியதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நேற்று நள்ளிரவு வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 10 சவரன் நகையை கொள்ளை அடித்தனர்.

மேலும் வீட்டில் என்னென்ன திருடு போனது என வீட்டின் உரிமையாளர் ஆரோக்கிய அருள்தாஸ் வந்த பின்பு தான் தெரியும். சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அருகில் உள்ள எம்விஎம் நகர் 7வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் ராஜகோபால். இவர் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் பெங்களூரில் வசிக்கும் தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை அடித்துள்ளனர். அதேபோல் எம்விஎம் நகர் 4வது குறுக்குத் தெருவில் வசித்து வரும் வழக்கறிஞர் வீனஸ் என்பவர் அமெரிக்காவில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதை அறிந்த திருடர்கள் வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி செய்துள்ளனர். அமெரிக்காவில் இருந்தபடி லீனஸ் வீட்டில் சிசிடிவி கேமரா மற்றும் சுற்றுப்புறச் சுவர்களில் அலாரம் அடிக்க செய்து கொள்ளையர்களை எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் அங்கிருந்த கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

எம்விஎம் நகரில் திருடு போனது குறித்து திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது மேலும் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்துள்ளனர். ஒரே நாளில் இரண்டு வீடுகளில் திருடு போனது ஒரு வீட்டில் திருட முயற்சி செய்த சம்பவங்கள் திண்டுக்கல் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 630

0

0