சகோதரர்களை கடித்த கட்டு விரியன் பாம்பு… அண்ணன் பலி.. தம்பி உயிருக்கு போராட்டம்… விஷமுறிவு மருந்து பற்றாக்குறையே உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
5 October 2022, 7:16 pm
snake-bite------updatenews360
Quick Share

திருவள்ளூர் அருகே சகோதரர்களை கட்டுவிரியன் பாம்பு கடித்ததில், அண்ணன் உயிரிழந்த நிலையில், தம்பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி எஸ்பி கோயில் தெருவில் வசிக்கும் பாபு – விஜயலஷ்மி. இவர்களது வீட்டுக்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பு, அவர்களின் இரண்டு மகன்களான ரமேஷ் (13) மற்றும் தேவராஜ் (12) ஆகியோரை கடித்தது. இதையடுத்து, கடித்த பாம்பினை கொண்டு சென்றுஇருவரையும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

அதில் 13 வயது சிறுவன் ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தம்பி தேவராஜுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கட்டுவிரியன் பாம்பு கடித்து 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஆரணி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, பாம்பு கடித்த சிறுவனுக்கு அருகில் உள்ள பெரியபாளையம் அரசு மருத்துவமனையில் விஷமுறிவு மருந்து இல்லாத நிலையில், திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க காலதாமதமானதால் உயிரிழந்ததாக, சிறுவனின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், பாம்பு கடிக்கு விஷம் முறிவு மருந்து போதிய அளவில் இல்லாததே உயிரிழப்புக்கு காரணம் எனவும், உயிரிழந்த கூலி தொழிலாளியின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், ஆங்காங்கே அருகிலேயே உள்ள அரசு மருத்துவமனைகளில் விஷமுறிவு மருந்தினை தயார் நிலையில் வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், மழை காலம் தொடங்கியுள்ளதால் ஆரணி பேரூராட்சி ஆற்றங்கரை ஒட்டிய பகுதிகளில் முட்புதர்கள் சூழ்ந்துள்ளதால், அதிக அளவு பாம்புகள், விஷப்பூச்சிகள் உள்ளதாகவும், எனவே பேரூராட்சி நிர்வாகத்தினர் உரிய முறையில் அதனை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

Views: - 677

0

0