முழு விபரம் தெரியாம எதுக்கு பேசணும்.. ஸ்டாலின் ஒரு அவசர குடுக்கை : பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அட்டாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2022, 7:19 pm
Vanathi -Updatenews360
Quick Share

திருப்பூர் : திமுக வின் தற்போதைய அமைச்சர் மா.சுப்ரமணியன் , மறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் ஆகியோர் தலைமையிலேயே கமலாலயத்தை அடித்து நொறுக்கினார்கள் என்பதற்கு நானே சாட்சி என்று பா.ஜ.க வின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

திருப்பூரில் பா.ஜ.க சார்பில் 60 வார்டுகளில் களம் காணும் 34 பெண்வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் வித்யாலயம் பகுதியில் உள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் பா.ஜ.க வின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் , பா.ஜ.க வில் 50% இடஒதுக்கீட்டை தாண்டி , 58% பெண்களுக்கு வேட்பாளர்களாக களம் காண வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசின் திட்டங்களை , எந்த கையூட்டும் இல்லாமல் எப்படி மக்களுக்கு கொண்டு சேர்க்க போகிறோம் என்பதை மக்களுக்கு எடுத்து சொல்லி வாக்கு கேட்கிறோம் என்றும் கூறினார்.

ஆள் பலம் , பண பலம் , அதிகார பலம் ஆகியவற்றை எதிர்த்து தான் பா.ஜ.க களம் காண்கிறோம் என்பது நன்றாக புரிகிறது என கூறியவர் , கோவை 70 வது வார்டில் கரூரை சேர்ந்தவர்கள் மக்களுக்கு பணம் கொடுக்கும் போது , அவர்களை பா.ஜ.க வினர் மாநில தேர்தல் அதிகாரியிடம் பிடித்து கொடுத்துள்ளனர் என கூறினார்.

அகில இந்திய அளவிலான சமூக நீதி கூட்டமைப்பு குறித்த கேள்விக்கு , சமூக நீதிக்கான தேவை இந்தியாவில் எங்கு ஏற்பட்டுள்ளது ? தமிழகம் தான் மத்திய அரசின் அதிக நிதியை பெறும் மாநிலமாக உள்ளது. சமூக நீதிக்கு பா.ஜ.க அரசால் என்ன பிரச்சனை வந்துள்ளது ?

OBC வகுப்பை சேர்ந்த ஒருவர் பிரதமராக இருப்பதற்கு ஸ்டாலின் ஆதரவு தர வேண்டும். அது தான் உண்மையான சமூக நீதி. அவர்கள் பேசுவது போலியான சமூக நீதி. குடும்ப அரசியலை காப்பாற்ற சமூக நீதி என வேஷம் போட்டுள்கார்கள் ,இதற்கெல்லாம் பெரிய ஆதரவு வராது என குறிப்பிட்டார்.

அரசியல் செய்வதற்காக திமுக எடுத்த ஆயுதம் நீட். தற்போது அந்த ஆயுதமே அவர்களை தாக்க துவங்கியுள்ளது என்று பேசியவர் , கமலாலயம் தாக்குதல் தொடர்பாக பேசும் போது , இதற்கு முன்னாள் கமலாலயத்தை அடித்து நொறுக்கியபோது கண்ணால் பார்த்த சாட்சியாக நானே இருக்கிறேன் என்றும் , தற்போதைய அமைச்சர் மா.சுப்ரமணியன் , மறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் ஆகியோர் தலைமையில் தான் கமலாலயத்தை அடித்து உடைத்தார்கள். இவர்களின் குணமே இது தான்.

திமுக ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதம் வரும் என நாங்கள் சொன்னது தற்போது உண்மையாகி வருகிறது என்றும் திமுக மீது குற்றம்சாட்டினார். மம்தா கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே மேற்கு வங்க ஆளுநர் சட்டமன்றத்தை முடக்கினார் .

முழு விவரம் தெரியாமல் மேற்கு வங்க ஆளுநரை கண்டித்து முதலல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்கிறார். மாநில முதல்வர் என்னவென்றே விவரம் தெரியாமல் , அவசரகுடுக்கையாக தன்னுடைய புரிதல் இவ்வளவுதான் என உலகம் முழுக்க காட்டணுமா ? என்றும் கேள்வி எழுப்பினார்.

Views: - 1168

0

0