அம்மா ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்று தேசிய அளவில் வென்ற மாணவர்கள் : பாராட்டு விழா நடத்தி கவுரவிப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 June 2022, 11:28 am
Amma IAS Academy - Updatenews360
Quick Share

கோவை அம்மா ஐ.ஏ.எஸ்.அகாடமியில் இலவச பயிற்சி பெற்று,சிவில் சர்வீசஸ் தேர்வில் தேசிய அளவில் இடம் பிடித்த மாணவ,மாணவிக்கான பாராட்டு விழா கோவையில் நடைபெற்றது.

கோவையில் நல்லறம் அறக்கட்டளை சார்பாக பூமார்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா ஐஏஎஸ் அகாடமியில், யு.பி.எஸ்.சி மற்றும் ஐ.ஏ.எஸ்.போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.

கோவை மட்டும் அல்லாது வெளியூரை சேர்ந்த மாணவ, மாணவிகளும் அம்மா ஐ.ஏ.எஸ் அகாடமியில் இலவசமாக சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்தும் விதமாக இலவசமாக பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் , நடந்து முடிந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமியில் பயிற்சி பெற்ற ரம்யா மற்றும் கமலேஸ்வரராவ் ஆகிய இருவரும் முறையே தேசிய அளவில் 46வது மற்றும் 297 வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் அம்மா ஐஏஎஸ் அகாடமியின் சார்பாக பாராட்டு விழா அவினாசி சாலையில் உள்ள இந்திய வர்த்தக சங்க அலுவலக அரங்கில் நடைபெற்றது.

நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும், சமூக ஆர்வலருமான எஸ்.பி அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இதில் அம்மா ஐ.ஏ.எஸ்.அகாடமியின் முதன்மை நிர்வாகி எஸ்.பி.விவேக் அன்பரசன், முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக பார்க் கல்வி குழுமங்களின் தலைவர் அனுஷா, மற்றும் நந்தகுமார் IRS, ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினார்கள்.

கவுரவ அழைப்பாளர்களாக, சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருணகுமார், அம்மன் அர்ஜுனன், ஏ.கே.செல்வராஜ், தாமோதரன், வி.பி.கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அம்மா ஐஏஎஸ் அகாடமியின் தலைமை செயல் அதிகாரி கிருத்திகா மேற்கொண்டார்.

Views: - 572

0

0