சிறையில் காயங்களுடன் விசாரணை கைதி உயிரிழப்பு.. உடலை வாங்க மறுத்து 8வது நாளாக தொடரும் போராட்டம்… தென்காசியில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
22 June 2023, 4:37 pm
Quick Share

தென்காசியில் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 8வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடையநல்லூர் தாலுகாவிற்குட்பட்ட புளியங்குடியைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் தங்கசாமி (26). இவரும், அவரது பாட்டி முப்பிலி மாடசாமியும் இணைந்து சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 11ம் தேதி புளியங்குடி காவல் துறையினர், இருவரையும் கடந்த ஜூன் 11ஆம் தேதி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தங்கசாமி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், கடந்த 14ம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட தங்கசாமி எதிர்பாராத விதமாக திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து பெருமாள்புரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கசாமி உயிரிழந்த சம்பவத்தை அறிந்த அவரது உறவினர்கள், தங்கசாமியின் உயிரிழப்புக்கு காவல்துறையினரே காரணம் என்றும், காவல் துறையினர் கடுமையாகத் தாக்கியதால் தான் அவர் சிறையில் உயிரிழந்ததாக குற்றம்சாட்டினர்.

பாளையங்கோட்டை ஹை கிரவுண்டு அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர், தங்கசாமியின் உடலை வாங்க அவர்கள் மறுத்துவிட்டனர். தங்கச்சாமியின் இறப்புக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

நேற்று தங்கசாமியின் இறப்பு நீதி விசாரணை நடத்தக்கோரியும், அவரது உயிரிழப்புக்கு காரணமாக காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது சகோதரர் திருநெல்வேலி டிஐஜியிடம் மனு அளித்துள்ளார்.
இதனிடையே, 8வது நாளாக உறவினர்கள் தங்கசாமியின் உடலை வாங்காமல் போராட்டம் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 267

0

0