‘ஷப்பா… என்ன வெயிலுடா சாமி’.. குளித்துக் கொண்டே பைக் ஓட்டிய இளைஞர் ; வைரலாக நினைத்தவருக்கு நேர்ந்த கதி..!!

Author: Babu Lakshmanan
19 May 2023, 10:54 am
Quick Share

தஞ்சாவூரில் குளித்துக் கொண்டே இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞருக்கும், அதை வீடியோ பதிவு செய்த அவரது நண்பருக்கும், காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் பெரியகோயில் பகுதியில் கடும் வெயிலின் தாக்கத்தை உணர்த்தும் விதமாக இளைஞர் ஒருவர் ஸ்கூட்டரில் முன் பக்கம் வாளியில் தண்ணீர் வைத்து, குளித்துக் கொண்டே ஓட்டினார். இதை மற்றொரு இளைஞர் செல்பேசி மூலம் வீடியோ பதிவு செய்தார். இந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், ஆபத்தை விளைவிக்கும் விதமாக வாகனத்தை ஓட்டியதாக, இருவர் குறித்து மேற்கு காவல் நிலையத்தினர், போக்குவரத்து ஒழுங்கு பிரிவினர் விசாரணை நடத்தினர். இதில், வாகனத்தை ஓட்டியவர் கீழவாசல் குறிச்சி வடக்கு தெருவைச் சேர்ந்த அருணாசலம் (23), இதை வீடியோ எடுத்தவர் குறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த பிரசன்னா (24) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அருணாசலம், பிரசன்னாவுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இருவரையும் இதுபோன்று பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் செயல்படக் கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Views: - 390

0

0