நடுவழியில் கொட்டும் மழையில் பழுதாகி நின்ற அரசு பேருந்து.. பரிதவித்த பயணிகள் : காவலர்கள் செய்த செயல்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2023, 6:30 pm
Gvot Bus - Updatenews360
Quick Share

கடந்த சில தினங்களாக திண்டுக்கல் நகரில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வந்தது. வெயிலின் தாக்கத்தால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது மாலை திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதனை அடுத்து இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது இதன் காரணமாக சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழை பெய்து கொண்டிருந்த பொழுது திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டானாவில் மதுரையிலிருந்து சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து பயணிகளுடன் நடுரோட்டில் நின்று விட்டது.

பேருந்தில் செல்ப் எடுக்காத காரணத்தினால் என்ன செய்வது என்று ஓட்டுநரும் நடத்துநரும் தவித்துக் கொண்டிருந்தனர். இதனால் கொட்டும் மழையில் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர். பின்னர் வேறு வழியின்றி போக்குவரத்து சார்பு ஆய்வாளர் உட்பட மூன்று காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து மழையில் நனைந்தபடியே ஏலேலோ ஐலசா , தள்ளு, தள்ளு, தள்ளு என வண்டியை தள்ளியபோதும் அரசு பேருந்து ஸ்டாட் ஆகவில்லை.

15 நிமிட போரட்டத்திற்கு பிறகு கொட்டும் மழையில் நனைந்து கொண்டு அரசு பேருந்தை ஓரமாய் நிறுத்தினர். பின்னர் பேருந்தில் பயணம் செய்து வந்த பயணிகளை மற்றொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்த மூன்று போக்குவரத்து காவலர்களின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

Views: - 262

0

0