தூத்துக்குடி VAO வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்… குற்றவாளிகள் இருவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம் ; ஆட்சியர் அதிரடி..!!

Author: Babu Lakshmanan
5 May 2023, 2:35 pm
Quick Share

முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் 2 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

கடந்த ஏப்.,25ம் தேதியன்று முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் சேவியர் (55) என்பவரை முன்விரோதம் காரணமாக அவரது அலுவலகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் தூத்துக்குடி முறப்பநாடு கலியாவூர் வேதகோவில் தெருவைச் சேர்ந்தவர்களான ராமசாமி மகன் ராமசுப்பிரமணியன் (எ) ராமசுப்பு (41) மற்றும் முருகன் மகன் மாரிமுத்து (31) ஆகியோரை முறப்பநாடு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

மேற்படி இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ராமசுப்பிரமணியன் (எ) ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஜமால் அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி முறப்பநாடு கலியாவூர் வேதகோவில் தெருவைச் சேர்ந்தவர்களான ராமசாமி மகன் ராமசுப்பிரமணியன் (எ) ராமசுப்பு, முருகன் மகன் மாரிமுத்து ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் ஜமால் மேற்படி 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Views: - 283

0

0