கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு… ஆபத்தை உணராமல் சாகசம் செய்யும் இளைஞர்கள்… கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?

Author: Babu Lakshmanan
13 December 2022, 6:55 pm
Quick Share

திருவள்ளூர் ; கொசஸ்தலை ஆற்றில் வெள்ளபெருக்கு காரணமாக, சீமாபுரம் தடுப்பணையில் பாய்ந்தோடும் வெள்ள நீரில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் சாகசம் செய்து வருவதை தடுத்து நிறுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாண்டஸ் புயல் காரணமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்ட உபரி நீர், தற்போது 7500 கன அடியாக தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது. இதனால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருக்கண்டலம் தாமரைபாக்கம், சீமாபுரம் உள்ளிட்ட தடுப்பணைகள் நிரம்பி, வெள்ள நீர் பாய்ந்து ஓடுகிறது.

தடுப்பணைகளில் பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும், மீன் பிடிக்கவோ, வேடிக்கை பார்க்கவும் கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டு, அதற்கான எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதனை பொருட்படுத்தாமல் அங்குள்ள இளைஞர்கள் தடுப்பணையின் மேலிருந்து ஆபத்தை உணராமல் சாகசம் செய்து குளிப்பதும், மீன்களை பிடிப்பதும் தடுப்பணையை காண்பதற்கும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

எனவே, உரிய போலீஸ் பாதுகாப்பை அங்கு மேற்கொண்டு உயிரிழப்புக்கள் ஏற்படாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ள வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 318

0

0