கோவையை பெருமைப்படுத்திய ‘வள்ளுவர் சிலை, மீடியா ட்ரீ’ ; கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசு பாராட்டு..!!

Author: Babu Lakshmanan
16 August 2023, 4:17 pm
Quick Share

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழ் எழுத்துள்ளால் ஆன திருவள்ளுவர் சிலை மற்றும் மீடியா ட்ரீ அமைக்கப்பட்டுள்ளதற்கு கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.

கோவை மாநகராட்சியில் பல்வேறு ஸ்மார்ட் சிட்டி பணிகள், சீர்மிகு நகர திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழர்களின் பெருமையை பறைச்சாற்றும் வகையில், ஜல்லிக்கட்டு விளையாட்டு சிலைகள், பாரம்பரிய நடனம், தமிழர் விழா பொங்கல், ஏர் உழும் வண்டிகள் ஆகியவற்றின் மாதிரி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குறிச்சி ரவுண்டானாவின் மையத்தில் தமிழ் எழுத்துகளால் ஆன திருவள்ளுவர் சிலை அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவருக்கு சிலை வைப்பது நாட்டிலேயே இது தான் முதல்முறையாகும். இந்த திருவள்ளுவர் சிலை 2.50 டன் எடையில் 20 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலையின் நெற்றியில் அறம் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மாலை மற்றும் இரவு நேரங்களில் விளக்குகளால் ஜொலிக்கும் வண்ணம் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது கோவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோல, கோவை மாநகர் ரேஸ்கோர்ஸ் (RACE COURSE) மாடல் சாலையில் ‘மீடியா ட்ரீ’ (MEDIA TREE) என்னும் எல்இடி டவர் அமைக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்துடன் SLOPED LED SCREEN டெக்னாலஜியைக் கொண்ட எல்இடி விளம்பரப் பலகை பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், விழிப்புணர்வு அறிவிப்புகள், மாநகராட்சி அறிவிப்புகள், விளம்பரங்கள் மற்றும் வீடியோக்களை ஒளிபரப்பச் செய்ய முடியும்.

இந்த நிலையில், நாட்டின் 77வது சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மீடியா டவரில் வழக்கமான வண்ண விளக்குகளுக்கு பதிலாக தேசியக்கொடி வடிவிலான விளக்குகள் மிளர விடப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் அப்பகுதியில் செல்பவர்கள் உற்சாகத்துடன் இந்த வண்ண விளக்குகளை பார்த்து சென்றனர். மேலும், பொதுமக்கள் மீடியா டவரின் முன்பாக நின்று புகைப்படம் எடுத்து சென்றனர்.

இந்த நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழ் எழுத்துள்ளால் ஆன திருவள்ளுவர் சிலை மற்றும் மீடியா ட்ரீ அமைக்கப்பட்டுள்ளதற்கு கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகத்தின் டுவிட்டர் பதிவில், “கோவையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக, ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தமிழ் எழுத்துக்களால் புகழ்பெற்ற திருவள்ளுவரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது கோவை மாநகரின் முக்கிய அடையாமாக உள்ளது. இது கலாச்சாரத்தை போற்றும் வகையில் அமைந்துள்ளது,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மத்திய அரசு பாராட்டி இருப்பது கோவை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 152

0

0