கடமை தான் முக்கியம்… பச்சிளங் குழந்தையுடன் வந்த காவலரின் நெகிழச் செய்த செயல் ; குவியும் பாராட்டு..!!

Author: Babu Lakshmanan
11 February 2024, 8:07 pm
Quick Share

திருவாரூர் நகர சட்டஒழுங்கு காவலர் 1 வயது நிரம்பாத கை குழந்தையுடன் திருச்சி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் சுழன்று சுழன்று போக்குவரத்தை சரிசெய்த வீடியோ வைரலாகி வருகிறது.

திருவாரூர் நகரின் முக்கிய நுழைவு வாயில் பகுதியாக இருந்து வருவது திருச்சி-நாகை தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் உள்ள விளமல் கல்பாலம் பகுதி வழியாகவும், மற்றொன்று பழைய பேருந்து நிலையம் ஓடம்போக்கி ஆற்றுப்பாலம் வழியாகவும் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

இந்நிலையில் திருவாரூர் நகராட்சி நிர்வாகம் விஜயபுரம் பகுதியில் புதிதாக கடைகள் கட்டும் பணிக்காக எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் திருவாரூர் பழைய பேருந்து நிலைய பாதையை முழுவதுமாக நகராட்சி நிர்வாகம் நேற்று முதல் அடைத்து வைத்துள்ளது.

திருவாரூர் நகராட்சி நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கையால் திருவாரூர் நகரின் மையபகுதிக்கு நுழையும் கனரக வாகனங்கள், நான்குசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் விளமல் கல்பாலம் அருகே உள்ள பாலம் வழியாக செல்லவேண்டிய நிலை இருப்பதால் திருச்சி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

இத்தகைய சூழலில் தைமாத இறுதி முகூர்த்தநாள் மற்றும் பல்வேறு ஆலயங்கள் குடமுழுக்கு நாளான இன்றைக்கு திருச்சி-நாகை தேசிய நெடுஞ்சாலை விளமல் கல்பாலம் அருகில் சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுதவிர மன்னார்குடி சாலை மார்க்கமாக திருவாரூர் நகருக்கு வரும் வாகனம் என திருச்சி-நாகை தேசிய நெடுஞ்சாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வழக்கமாக விளமல் கல்பாலம் அருகில் போக்குவரத்தை சரிசெய்வதற்காக போக்குவரத்து காவலர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டுவரும் போதிலும் இன்று அங்கு யாரும் பணியில் இல்லை. இந்நிலையில் திருவாரூர் நகர சட்டம் ஒழுங்கு காவலர் மணிகண்டன் என்பவர் தனது பணியை காலை முடித்துவிட்டு பின்னர் தனது வீட்டில் இருந்து தனது 1 வயது நிரம்பாத கை குழந்தையுடன் வீட்டு தேவையான சாமான்களை வாங்க விளமல் பகுதிக்கு வந்தபோது, போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் வாகனங்களில் அவதியுற்று வந்ததை கண்டார்.

அப்போது தனது கையில் இருந்து கை குழந்தையும் பொருட்படுத்தாமல் காவலர் மணிகண்டன். திருச்சி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் அணிவகுந்து நின்றிருந்த வாகங்களை ஒன்றன் பின் ஒன்றாக இயக்கி போக்குவரத்து நெரிசலை சரிசெய்தார்.

பச்சிளங் கை குழந்தையோடு காவலர்கள் மணிகண்டன் சாலையின் இருபுறமும் மாறி மாறி வாகனங்களை இயக்கி போக்குவரத்தை சரிசெய்த காட்சியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

ஆப் டூட்டியில் பணியாற்றிய சட்டம் ஒழுங்கு காவலர் மணிகண்டனுக்கு உதவியாக அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்த காட்சியானது போதிய அளவிற்கு காவலர்கள் இல்லாத நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

Views: - 347

0

0