வாடிக்கையாளர்களின் விண்ணப்பம் பூர்த்தி செய்வதில் மோசடி.. ரூ.41 லட்சம் அபேஸ் செய்த நகை மதிப்பீட்டாளர்… போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
21 January 2023, 7:34 pm
Quick Share

திருச்சி : திருச்சி அருகே வங்கியில் 41 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளரை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், துறையூர் பாலக்கரை பகுதியில் கனரா வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் நகை மதிப்பீட்டளராக பணியாற்றியவர் முகேஷ். வங்கியில் துறையூர் மற்றும் சுற்றுப்புற சுற்றுப்புறத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர்.

அத்துடன் ஏராளமான விவசாயிகள் தங்களது நகைகளை அடமானம் வைத்தும், கடனும் பெற்றுள்ளனர். இந்நிலையில் இங்கு நகை மதிப்பீட்டாளராக பணிபுரியும் முகேஷ் என்பவர் தங்க நகை மீது கடன் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் நகைகளை மதிப்பீடு செய்து அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மேல் அதிகாரியிடம் கொடுப்பார்.

இதேபோல் சில வாடிக்கையாளர்களிடம் மோசடியாக இரண்டு விண்ணப்பங்களில் கையொப்பம் பெற்று, அதில் ஒன்றில் தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தின் சரியான அளவீட்டை நிரப்பியும் மற்றொரு விண்ணப்பத்தில் அதிக எடை மற்றும் ரொக்கத்தை நிரப்பி, அதனை மேல் அதிகாரியிடம் கொடுத்தும் மோசடி செய்துள்ளார்.

மேலும் மீட்கப்பட்ட நகைக்கு பதிலாக மோசடியாக மீண்டும் அந்த நகையை அடமானம் வைத்து ரூபாய் 41 லட்சத்து 22 ஆயிரத்தை வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியது தணிக்கையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த வங்கியின் மண்டல துணை பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் நகை மதிப்பீட்டாளர் முகேஷ் மீது ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் துறையூர் வங்கி கிளையில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 332

0

0