வறட்சியில் தவிக்கும் வனம்…தண்ணீர் தேடி குட்டிகளுடன் ஊருக்குள் உலா வந்த காட்டு யானைகள்: பாழடைந்த நீர் தொட்டிகளை பராமரிக்குமா வனத்துறை?(வீடியோ)

Author: Rajesh
11 April 2022, 2:05 pm
Quick Share

கோவை: தடாகம் பகுதியில் தண்ணீரை தேடி பழங்குடியின கிராமத்திற்கு குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளான நம்பர்.24 வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், தடாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ளன.

தமிழகத்தில் குறிப்பாக கோவை மாவட்டத்தில் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. மேலும்,வனப்பகுதிகளில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக தண்ணீருக்காகவும்,உணவுக்காகவும் யானை,மான் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் நுழைகின்றன.

ஊருக்குள் நுழையும் வனவிலங்குகள் விளைநிலங்களை நாசப்படுத்துவதோடு,மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன. பல இடங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வாகனங்கள் மனித – வன உயிரின மோதலையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் வனத்துறையினர் சார்பில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த தண்ணீர் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அதற்கு வனத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டும் அந்த நிதியும் முறையாக செலவிடுப்படுவதில்லை எனவும் வன உயிரின ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தடாகம் பள்ளத்தாக்குப்பகுதியில் அமைந்துள்ள நம்பர்.24 வீரபாண்டி ஊராட்சிக்குட்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்க கூடிய மருதம் கரை கீழ்பதி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியை தேடி வந்த குட்டிகளுடன் கூடிய காட்டு யானைகள் தொட்டியில் நீர் அருந்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் நேற்று நீதிபதிகள் ஆய்வு என்பதால் தற்பொழுது தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளதாகவும் மேலும் இந்த தொட்டிகளை பராமரித்து, வெயில் காலங்களில் தண்ணீர் வைக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

Views: - 584

0

0