கவர்ச்சி விளம்பரத்தை நம்பி ரூ.26 லட்சம் முதலீடு.. பேப்பரில் வெளிவந்த செய்தி.. கடிதம் எழுதி வைத்து விட்டு இளைஞர் விபரீத முடிவு!!

Author: Babu Lakshmanan
2 May 2023, 4:53 pm
Quick Share

வேலூர் ; ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் தான் என் சாவுக்கு காரணம் என இளைஞர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் பொதுமக்களிடம் பல ஆயிரம் கோடியை வசூலித்து, மோசடி செய்துள்ளது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தில் ரூ.26 லட்சம் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாற்றமடைந்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் கல்லேரி பகுதியைச் சேர்ந்த 39 வயதான பிரசாந்த் என்பவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு அவரின் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயிரை மாய்த்து கொள்வதற்கு முன்பு கைப்பட கடிதம் ஒன்றை அவர் எழுதி வைத்தார். அந்த கடிதத்தில் ‘‘அதிக வட்டித் தருவதாகக் கூறியதால், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பெரிய கரும்பூரைச் சேர்ந்த வெங்கடேஷிடம் ரூ.26 லட்சம் கொடுத்து ஏமாந்துவிட்டேன். அவர் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் ஏஜென்ட்டாகச் செயல்பட்டு வந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரால், அவர் கைது செய்யப்பட்டு விட்டார். கடன் வாங்கி அவ்வளவுப் பணத்தையும் அவரிடம் கொடுத்திருந்தேன்.

இந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பக் கேட்பதால் என்னால் திருப்பித் தர முடியவில்லை. தனிப்பட்ட முறையிலேயே நான் ரூ.12 லட்சத்துக்கு மேலாக வட்டி கொடுத்துவிட்டேன். அதிக கடன் சுமையில் மாட்டிக் கொண்டேன். என் சாவுக்கு ஐ.எஃப்.எஸ் நிறுவனம் தான் காரணம். தயவுசெய்து இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டோரிடம் உரிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இது குறித்து தகவல் அறியகுடியாத்தம் நகரப் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 249

0

0