அமைச்சர் மஸ்தானின் பதவிக்கு சிக்கல்…? ஒரே நேரத்தில் 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா ; பரிதவிப்பில் விழுப்புரம் மாவட்ட திமுக..!!

Author: Babu Lakshmanan
2 September 2023, 6:07 pm
Quick Share

விழுப்புரம் ; திண்டிவனம் நகராட்சியில் ஒரே நேரத்தில் 13 கவுன்சிலர்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சராக இருப்பவர் செஞ்சி மஸ்தான். அமைச்சராக இவர் பொறுப்பேற்றதில் இருந்து அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருகின்றன.

குறிப்பாக, கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது, மாற்றுக் கட்சியிலிருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், தனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களுக்கே பொறுப்புகளை வழங்கியதாக கூறப்படுகிறது. அதிலும், பிரபல சாராய வியாபாரியுமான மரூர் ராஜாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி, எதிர்கட்சிகளுக்கு செம தீணியை அமைச்சர் மஸ்தான் கொடுத்தார்.

இதனிடையே, கடந்த மாதம் நடைபெற்ற திண்டிவனம் நகராட்சி கூட்டத்தின் போது, நிர்வாக செயல்பாடுகளில் அதிருப்தி இருப்பதாக 13 திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அதோடு, அமைச்சர் மஸ்தான் பற்றி திமுக தலைமைக்கு 13 கவுன்சிலர்கள் பகிரங்கமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த 31ம் தேதி நடைபெற்ற திண்டிவனம் நகராட்சி நகரமன்ற கூட்டத்தில் 7வது வார்டு திமுக கவுன்சிலர் புனிதா வாயில் கருப்பு துணியை கட்டியபடி வந்து அதிர்ச்சி கொடுத்தார். மேலும், நகரமன்ற கூட்டத்தில் பேசிய திமுக அதிருப்தி கவுன்சிலர்கள், தங்கள் வார்டுகளுக்கு அடிப்படை வசதிகளும் செய்யவில்லை என்றும், இதனால் பொதுமக்கள் மத்தியில் தங்களுக்கு அவமானமாக உள்ளதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, எங்களுடைய தளபதி ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த நகரமன்றம் செயல்படுவதாகக் கூறி, தங்களுடைய ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கொடுக்கப்போவதாக தெரிவித்து விட்டு, 13 கவுன்சிலர்கள் கையொப்பமிட்ட ராஜினாமா கடிதத்தை உயர்த்திக் காட்டிவிட்டு வெளிநடப்பு செய்தனர்.

நகராட்சி வார்களுக்கு ஏதேனும் அடிப்படை வசதிகளை செய்ய முறையிட்டால், அமைச்சர் மஸ்தானின் மருமகனை கேளுங்கள் என்று கூறுவதாகவும், அமைச்சர் செஞ்சி மஸ்தான் மருமகன் ரிஸ்வான் தலையீடு நகராட்சியில் அதிகமாக உள்ளதாக வெளிநடப்பு செய்த திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, செஞ்சி பேரூராட்சியில் செஞ்சி மஸ்தான் தனது மகன் மொக்தியார் அலி மஸ்தானை போட்டியிடச் செய்து வெற்றி பெற்று, செஞ்சி பேரூராட்சி தலைவராக்கினார். விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளராகவும் மொக்தியார் அலி மஸ்தானே இருந்து வருகிறார்.

அதேபோல, அமைச்சர் செஞ்சி மஸ்தானின் உதவியாளராக செயல்பட்டு வரும் அவரது மருமகன் ரிஸ்வான், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை அமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.

விழுப்புரம் மாவட்ட திமுகவில் எங்கு திரும்பினாலும் அமைச்சரின் குடும்பத்தினரே கட்சிப் பொறுப்புகளில் இருந்து வருவதால், கட்சித் தொண்டர்கள் பெரும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். வாரிசு அரசியல் செய்யும் திமுக என்று எதிர்கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில், அதனை நிரூபணமாக்கியுள்ளதாக உட்கட்சியினரே முனுமுனுத்து வருகின்றனர்.

இப்படியிருக்கையில், அமைச்சர் மஸ்தான் குடும்பத்தினர் அடுத்தடுத்து புகார் வரும் நிலையில், அவரது பதவிக்கு ஆபத்து வருமோ..? என்ற பேச்சு அடிபட்டு வருகிறது.

Views: - 462

0

0