‘ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியல… நீ வந்து அதிமுக-வை அழிக்கப் போறியா’… அண்ணாமலைக்கு இபிஎஸ் பதிலடி!!

Author: Babu Lakshmanan
13 April 2024, 8:46 am
Quick Share

ஒரு எம்எல்ஏ, எம்பி பதவி கூட பார்க்காத நீயெல்லாம் அதிமுகவை பற்றி பேசுறீயா..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

நாமக்கல், சேலம் அதிமுக பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது :- செய்த நன்றி யாரும் மறந்தாலும் அவர்களுக்கு வாழ்க்கையே இல்லை என்பார்கள். செல்வகணபதிக்கு என்னைப்பற்றி பேசுவதற்கு தகுதி கிடையாது, ஜெயலலிதா சிறைக்கு செல்வதற்கு முக்கிய காரணம் செல்வகணபதி தான். கலர்டிவி ஊழல் மற்றும் கொடைக்கானலில் விதிமுறை மீறி ஹோட்டல் கட்டுவதற்கு அனுமதி கொடுத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக தான் செல்வகணபதி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

மேலும் படிக்க: மனிதப் பட்டி அமைத்து வாக்காளர்கள் அடைப்பு… திமுக மீது தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்..!!

ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கும்போது, செல்வகணபதி பதவிக்கு வந்து தவறு செய்தால் முதல்வர் ஸ்டாலின் பதவி வைத்திருப்பாரா? அதை தான் ஜெயலலிதாவும் செய்தார். அதனால் தான் பதிவிலிருந்து நீக்கப்பட்டார்.

அதிமுகவில் இருக்கும் ஒவ்வொரு தொண்டர்களும் உழைக்க பிறந்தவர்கள். தொண்டர்களின் உழைப்பால் தான் அதிமுக ஏற்றம் பெற்றுள்ளது. அதிமுக மக்களுக்காக உழைக்கின்ற இயக்கம்; மக்கள் நம்பிக்கை பெற்ற இயக்கம். என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தோமோ அனைத்தையும் நிறைவேற்றி நாட்டு மக்களிடம் நன்மதிப்பைப் பெற்ற அரசாங்கம் அதிமுக அரசாங்கம் தான்.

அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது அனைத்து திட்டங்களும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டு விட்டது. ஏழைகளுக்கு மருத்துவம் கொடுப்பதை கூட பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின் தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் நிறுத்தப்பட்டுள்ளது. நல்ல திட்டங்களை ரத்து செய்வதில் சாதனை படைத்த அரசாங்கம் என்றால் அது திமுக அரசாங்கம் தான்.

திமுக தேர்தல் பத்திரம் பற்றி பேசுகிறார்கள்; அதைப் பற்றி பேசுவதற்கு திமுக தலைவருக்கு என்ன தகுதி உள்ளதா? திமுக 656 கோடி தேர்தல் மூலமாக நிதி பெற்றுள்ளது. திமுக வேண்டுமென்றே மற்றவர்களை பற்றி பேசி தப்பிக்க பார்க்கிறார்கள். திமுக 656 கோடி தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்றதற்கு பதில் என்ன..?
சாதாரணமாக மூன்று ஆண்டுகளில் 656 கோடி தேர்தல் பத்திரம் மூலம் நிதி கொடுத்து விடுவார்களா என்று கேள்வி எழுப்பினர்.

ஆன்லைன் ரம்மி நிறுவனம் 509 கோடி கொடுத்துள்ளது. ஆன்லைன் ரம்மி மூலமாக எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவில் வந்துள்ளது. அந்த பணத்தை வாங்குவதற்கு எப்படி மனம் வந்தது. சூதாட்ட பணத்தை வாங்கிய தலைவர் தான் திமுக கட்சி. பணம் எப்படி வந்தாலும் சரி, திமுகவிற்கு பெட்டி வாங்கி தான் பழக்கம். பெட்டி தான் பிடிக்கும். எங்கிருந்து பணம் வந்தாலும் பரவாயில்லை.

விலைமதிக்க முடியாத இளைஞர்கள் உயிரிழந்து பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்துள்ளது. அந்த பணத்தை வாங்கிய கட்சிதான் திமுக கட்சி. செல்வகணபதி அதிமுகவில் இருந்தபோது ஊழல்வாதி என்று திமுகவால் முத்திரை குத்தப்பட்டு, திமுகவிற்கு சென்றவுடன் உத்தமராகிவிட்டார்.

மேலும் படிக்க: செந்தில் பாலாஜியால் திடீர் சிக்கல்!.. கரூரில் கரையேறுவாரா, ஜோதிமணி…?

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்ந்து வருகிறது. ஆட்சி மாறினால் காட்சி மாறும் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. கீழே இருக்கும் சக்கரம் மேலே வந்தே தீரும் உப்பை தின்பவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். திமுக ஆட்சியில் துறை வாரியாக ஊழல் நடந்து கொண்டிருக்கிறது அனைத்தும் தெரியும். அதிமுகவில் செந்தில் பாலாஜி இருக்கும்போது ஊழல்வாதி என்று பேசிய ஸ்டாலின், திமுகவிற்கு செந்தில்பாலாஜி சென்றவுடன் செயல்வீரரை சிறையில் அடைத்து விட்டார்கள் என்று பேசி இரட்டை வேடம் போடும் கட்சி தான் திமுக.

திமுகவை பொருத்தவரைக்கும் குழு அமைப்பது மட்டும் தான் வேலை. 52 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. குழு மாடல் ஆட்சி என்று பெயர் வைத்தால் திமுகவிற்கு சரியாக இருக்கும். இதனால் பல திட்டங்கள் கிடப்பில் உள்ளது எந்த பணிகளும் நடைபெறவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டு காலங்கள் ஆகிறது. தொடர்ந்து, விலைவாசி உயர்ந்து வருகிறது. ஏழை, எளிய மக்கள் வாழ வழியில்லாமல் சிரமத்தில் உள்ள காட்சி திமுக ஆட்சியில் பார்க்க முடிகிறது. இதற்கு விடிவு காலம் பிறக்கும் இடம் என்றால், அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும், எனக் கூறினார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செந்தில் பாலாஜி மின் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து வீடியோ போட்டு காண்பித்தார். மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும்; திமுக ஆட்சியில் மின்சார கட்டணம் கேட்டாலே ஷாக் அடிக்கும். பெட்டிகளை ஊர் ஊராகக் கொண்டு சென்று வைத்துவிட்டு மக்கள் குறைகளை பெட்டியில் போடுங்கள். ஆட்சிக்கு வந்தவுடன் பெட்டியை திறந்து மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று கூறியிருந்தார்.

இப்பொழுது, பெட்டி காணாமல் போய்விட்டதா? இல்லை. சாவி தொலைந்துவிட்டதா? என்று தெரியவில்லை. இதன் மூலம் மக்களை எவ்வாறு ஏமாற்றுகிறார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சதுரங்க வேட்டை படத்தில் வருவது போன்று ஒருவரை ஏமாற்ற வேண்டுமென்றால் ஆசையை தூண்ட வேண்டும் என்று கூறுவார்கள்.

அவ்வாறு தான் மக்களிடம் ஆசை தூண்டி பெட்டியின் மூலமாக மனுவை பெற்றுக் கொண்டு போட்டுகளை வாங்கி ஆட்சிக்கு வந்தவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை மறந்துவிட்டார். இதற்கு தக்க பதிலடி நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் கொடுப்பார்கள். நாட்டு மக்கள் பாராட்டுகின்ற ஆட்சி அதிமுக ஆட்சி தான்.

எடப்பாடி பழனிசாமி மோடியை பார்த்து பயந்து கொண்டிருக்கிறார். அதிமுக அடிமை கட்சி, எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கள்ளத்தொடர்பு, கள்ளஉறவு என்று பேசுகிறார்கள்; ஏற்கனவே திமுகவில் அப்பாவுக்கும் மகனுக்கும் அனுபவம் உள்ளது. கள்ளக் கூட்டணி என்பது திமுகவிற்கு பொருத்தமான வார்த்தை

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்துவிட்டது. எங்கள் கட்சி வேலையை நாங்கள் பார்க்கிறோம். பாஜக கட்சியை வெளியே அவர்கள் பார்க்கிறார்கள். அதிமுகவைப் பொறுத்தவரை தமிழக மக்களின் உரிமை காக்க வேண்டும் அதுதான் எங்கள் இலக்கு. ஒற்றை செங்கலை எடுத்து வந்து உதயநிதி காண்பித்து என்ன பயன் கிடைக்கிறது இந்த செங்கலை நாடாளுமன்றத்தில் காண்பித்து இருக்க வேண்டும்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை ஏன் கட்டவில்லை என்று நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிந்து பயன்பாட்டிற்கு வந்திருக்கும்.அதை செய்யாமல் செங்கலை ஊர் ஊராக எடுத்துச் சென்று காண்பித்து விளம்பரம் செய்து வருகிறார்.

நாடாளுமன்றத்தில் இந்த ஒற்றை செங்கலை ஒவ்வொரு திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் காண்பித்து அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். இதே இடத்தில் அதிமுக இருந்ததால் செய்திருப்போ.ம் அந்தத் தில்லுக்கு அணியும் அதிமுகவிற்கு உள்ளது. திமுகவிற்கு ரிப்பன் வெட்டுவதற்கு சிரமமாக உள்ளதா? ஆசியாவில் மிகப்பெரிய கால்நடை பூங்காவை கட்டி முடிக்கப்பட்ட நிலையில் ஏன் திறக்கவில்லை. ஆனால், ஒற்றை செங்கலை மட்டும் எடுத்துக் கொண்டு சுற்றி வருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

இந்தியாவில் அதிகமாக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு; கடன் வாங்குவதன் மூலம் வரும் வரி எல்லாம் மக்கள் தலையில்தான் வந்து விடியும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 8.50 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது.

அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து 5.15 லட்சம் கோடி தான் கடன். இதில் 20 ஆயிரம் கோடி மத்திய அரசின் உதவி திட்டத்திற்கு ஏற்றுக்கொண்டோம். கொரோனா காலத்தில் எந்தவித வரியும் மாநிலத்தில் பெறவில்லை,அப்படி இருந்தும் தமிழகத்தில் விலைவாசி ஏறாமல் பார்த்துக் கொண்டோம். வருமானம் இல்லாமல் இருந்தபோது கூட அதிமுக சிறப்பான ஆட்சி என்று மக்கள் போற்றும் அளவிற்கு செயல்பட்டது. மேலும், 40 ஆயிரம் கோடி கொரோனாவிற்கு செலவு செய்யப்பட்டது.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துவிட்டது. இதன் மூலம் இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். இந்த நிலை திமுக ஆட்சியில் பார்க்க முடிகிறது. இதற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என்றால் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலர வேண்டும். போதைப் பொருட்கள் கடத்தும் நபருடன் திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கும் புகைப்படத்தை காண்பித்தார். இதன் மூலம் போதைப் பொருட்கள் கடத்தும் நபர்கள் வெளிநாட்டிற்கு போதைப்பொருட்கள் கடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் சொந்த கட்சியினரையே கட்டுப்படுத்த முடியவில்லை,இவரை நம்பி நாட்டை கொடுத்தால் நாடு எப்படி இருக்கும். நாட்டு மக்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது.

அதிமுகவை அழிப்பேன் என்று சொல்கிறார் அண்ணாமலை. ஒரு கவுன்சிலர் பதவி கூட இதுவரை ஜெயிக்காத அண்ணாமலை, ஒரு எம்எல்ஏ, எம்பி பதவி கூட பார்க்காத நீயெல்லாம் அதிமுகவை பற்றி பேசுறீயா. பதவி வரும் போது பணிவு வர வேண்டாம். ஆனால், அது உங்களிடம் இல்லை. தலைக்கணத்துடன் ஆடாதீங்க. 500 நாட்களில் 100 திட்டங்களை செயல்படுத்துவாராம். பொய்ய பொருந்திர மாதிரி, சொன்னால் மெய்யே பயந்திடுமாம். ஏற்கனவே 2021 ல் 520 அறிவிப்புகளை அறிவித்து மக்களை ஏமாற்றியது போதாதா..? இனி நீ வேற புளுகு மூட்டையை அவிழ்த்து விடுறியா..? ஏன் இத்தனை நாட்கள் நிறைவேற்றல, ஏன் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலையா, எனக் கூறினார்.

Views: - 107

0

0