சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியக் கொடிக்கு அனுமதி மறுப்பு.. யார் கொடுத்த அதிகாரம்..? திமுக அரசை எச்சரித்த அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
23 October 2023, 6:28 pm
Quick Share

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் இந்தியக் கொடியை அனுமதித்த விவகாரத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டம் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக, 11 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி சென்னைக்கு வந்துள்ளது. இதனால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மைதானத்திற்குள் கருப்பு உடை அணிந்து வரவும், இந்தியக் கொடியை எடுத்துச் செல்ல ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேசியக் கொடியுடன் வந்த சில ரசிகர்களிடம் இருந்து போலீசார் தேசிய கொடியை காவல் ஆய்வாளர் பறிமுதல் செய்தார். பின்னர், அந்தக் கொடியை குப்பைத் தொட்டியில் போட முயன்றார். இதனால், அங்கிருந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் தேசியக்கொடியை அனுமதி மறுத்ததற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது ;- இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது ‘ஜெய்ஸ்ரீராம்’ என கோஷம் எழுப்பியதை அமைச்சர் உதயநிதி குறிப்பிட்டார். கடந்த காலங்களில் பாகிஸ்தானில் நமது வீரர்களுக்கு நிகழ்ந்த சம்பவங்களை அவர் மறந்துவிட்டார்.

திமுக அமைச்சர் பொன்முடியின் மகனும், தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தலைவருமான அசோக் சிகாமணி அரசியல் பிரசாரத்தை ஒரு படி மேலே கொண்டு சென்று இன்று நமது தேசத்தின் கொடியை அவமதித்துள்ளார். சேப்பாக்கத்தில் இன்றைய போட்டிக்கு இந்தியக் கொடியை ஏந்தியபடி சென்ற ரசிகர்களை மைதானத்திற்குள் போலீசார் அனுமதிக்கவில்லை. இந்த உரிமையை யார் கொடுத்தது?

நமது தேசியக் கொடியை அவமதித்த போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் மாநில மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில், மூவர்ண கொடியின் புனிதத்தை இழிவுபடுத்தும் இந்த ஊழல் திமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டியிருக்கும், என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

Views: - 334

0

0