தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. மக்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்வார் முதலமைச்சர் ஸ்டாலின் : திமுக எம்பி கனிமொழி நம்பிக்கை..!!

Author: Babu Lakshmanan
22 October 2022, 11:36 am
Quick Share

தூத்துக்குடி ; விசாரணை ஆணையத்தின் அறிக்கையை கொண்டு தமிழக முதல்வர் மக்களுக்கு நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கை எடுப்பார் என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதாஜீவன், ஊரகவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழு தலைவர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.

dmk mp kanimozhi - updatenews360

தூத்துக்குடி மாநகராட்சியில் முருகேசன் நகர், பிரையண்ட் நகர், விஎம்எஸ் நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பல மணி நேரம் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது இந்தப் பணிகளை விரைவுப்படுத்துவதற்கும் சரியான முறையில் பணிகளை முடிப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது எம்பி கனிமொழி கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு மழையின் போதும் பல இடங்களில் மழை நீர் தேங்கி இருந்து பொது மக்களுக்கு மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மழை நீர் தேங்குவதால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

எனவே, வரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மத்திய அரசு மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் நகர உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதி மூலமாக பல்வேறு பகுதிகளில் இந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

dmk mp kanimozhi - updatenews360

இதுவரை சுமார் 60 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகளை விரைவுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, மழை பெய்தால் இந்த பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க மின் மோட்டார்கள் மூலம் மழை நீர் அகற்றுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது, என்று கூறினார்.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்தான கேள்விக்கு அவர் கூறுகையில், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முதல்வர் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை பார்த்துவிட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இன்னும் சரியாக விசாரித்து விட்டு என்னென்ன செய்ய வேண்டும் என்று மக்களுக்கு நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கை எடுப்பார், எனக் கூறினார்.

முன்னாள் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினர் வலியுறுத்தி வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “பல தரப்பிலிருந்து வரக்கூடிய இந்த கேள்வி நியாயமான கேள்வி. முதல்வர் விசாரித்து தான் எந்த முடிவையும் எடுக்க முடியும்,” என கூறினார்.

இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Views: - 330

0

0