பாஜக போட்டியிலேயே இல்ல… மாயையை உருவாக்குகிறார் அண்ணாமலை ; எஸ்பி வேலுமணி!!

Author: Babu Lakshmanan
15 April 2024, 4:46 pm
Quick Share

மொத்தமாகவே மூன்று முதல் நான்கு சதவீதம் வாக்குகளை மட்டுமே வைத்திருக்கும் பாஜக மூன்றாவது இடத்திற்கு தான் தள்ளப்படும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை பந்தயசாலை பகுதியில் சிஎஸ்ஐ மறை மாவட்ட பேராயர் திமோத்தி ரவீந்தரை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க: படர்தாமரை உடலுக்கு கேடு… பிஜேபியின் தாமரை நாட்டுக்கே கேடு ; நடிகர் கருணாஸ் விமர்சனம்..!!!

சுமார் அரைமணி நேர சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, கோவை மற்றும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகளில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்பது உறுதி என்றும், அதிமுக தான் கோவையில் மிகப்பெரிய வளர்ச்சியை கொடுத்தது என்பது மக்களுக்கு தெரியும் என்றும் கூறினார்.

கோவை பந்தய சாலையில் உள்ள நடை பயிற்சிக்கான நடைபாதை உட்பட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு சாலைகளை அமைத்து தந்து 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை கோவைக்கு அதிமுக கொடுத்ததை சுட்டி காட்டியதுடன், திமுக அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்றும், பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசும் கோவைக்காக எதுவும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

தற்போது பாஜக வேட்பாளர் அண்ணாமலை 500 நாட்களில் 100 திட்டங்களை தருவதாக வாக்குறுதி தந்துள்ளதாகவும், விபரம் தெரிந்த மக்கள் யாரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் கூறியதுடன், தற்போது கோவையில் சர்வதேச விமான நிலையம் அமைப்போம் என்கிறார்கள். ஆனால் எடப்பாடி முதலமைச்சராக இருந்தபோது, முதன்மை செயலாளரை நேரடியாக அழைத்து வந்து விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிதி ஒதுக்கி நில எடுப்பு செய்து கொடுத்ததாகவும், ஆனால் அப்போது மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என்பது இங்கு உள்ள மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் படிக்க: சமூகநீதி என உச்சரிக்கக் கூட தகுதி இல்லாத திமுக அரசு ; வேங்கை வயல் மக்களின் திடீர் முடிவுக்கு அண்ணாமலை ரியாக்ஷன்!!

திமுகவிற்கும், அண்ணா திமுகவிற்கும் தான் போட்டி என்றுள்ள சூழலில், திமுக இப்போது களத்தில் இல்லை என்றும், அதேவேளையில் பாரதிய ஜனதா கட்சி மீடியா மூலமும் சமூக ஊடகங்கள் மூலமாகவும், பாஜக மிகப்பெரிய வெற்றியை பெரும் என்று பரப்பி வருவதாகவும் கூறிய அவர், அண்ணாமலைக்கு செல்வாக்கு இருப்பதாகவும் பரப்புகிறார்கள் என்றும் விமர்சித்தார்.

மொத்தமாகவே மூன்று முதல் நான்கு சதவீதம் வாக்குகளை மட்டுமே வைத்திருக்கும் பாஜக மூன்றாவது இடத்திற்கு தான் தள்ளப்படும் என்றும் தெரிவித்தார். இன்றைய தினம் அண்ணாமலைக்கு செல்வாக்கு இருப்பதாக அவர்களே தயார் செய்து கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டு இருப்பதாகக் கூறினார்.

அதன்படி, பாஜகவின் அண்ணாமலை 38 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்றும், இரண்டாவது இடத்தில் 33% வாக்குகளை திமுக பெறும், அண்ணா திமுகவைச் சேர்ந்த சிங்கை இராமச்சந்திரன் 18.5% வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்திற்கு செல்வார் என்றும், பாஜகவை ஃபோக்கஸ் செய்து மீடியாவில் ஒரு மாயையை உருவாக்கி வருகிறார்கள் என்றும், பாஜகவிற்கு நான்கு எம்எல்ஏக்களை வெற்றி பெறச் செய்தது அதிமுக தான் என்றும் எஸ் பி வேலுமணி சுட்டிக்காட்டினார்.

பாரதிய ஜனதா கட்சி முதலில் ஒவ்வொரு பூத்திற்கும் ஆள் போடட்டும் என்றும், களத்தில் அதிமுக மட்டுமே உள்ளது. குறிப்பாக கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெறுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜக வேட்பாளர் அண்ணாமலை, ஆனைமலை- நல்லாறு திட்டத்தை கொண்டு வருவோம் என தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டி இருப்பதாகவும், நீண்ட காலமாக மக்கள் எதிர்பார்த்த இந்த திட்டம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, கேரள முதல்வரை அன்று அமைச்சராக இருந்த தான் உட்பட அனைவரும் நேரடியாக சந்தித்து ஒரு கமிட்டி ஆரம்பித்து அந்தப் பணியை புதிய உத்வேகத்துடன் எடுத்துச் சென்ற நிலையில், ஆட்சி மாற்றத்தால் அது தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறினார்.

தற்போது இது குறித்து பேசும் அண்ணாமலை மூன்றாண்டு காலம் மாநில தலைவராக இருந்த போது இதை செய்திருக்க வேண்டும் என்றும், ஆனால் இப்போது வந்து செய்கிறேன் என்று சொல்வது ஏமாற்று வேலை என்றும் விமர்சித்தார். மேலும், இந்த விவகாரம் என்பது இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனை என்றும், பாஜக கேரளாவிற்கோ, தமிழகத்திற்கோ முதல்வராக வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், அதிமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் பொழுது ஆனைமலை- நல்லாறு திட்டம் மீண்டும் உயிர்பிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

அண்ணாமலை மக்களை ஏமாற்றுவதை கண்டு ஒரு சிலர் நம்பலாம் என குறிப்பிட்ட அவர், அதிமுகவை அழிப்பேன், எடப்பாடியை அழிப்பேன் என்று அண்ணாமலை கூறுகிறார். ஆனால் பொன்விழா கண்ட கட்சி அதிமுக என்றும், மேல்மட்டத்தில் இருக்கும் சில பேர் அண்ணாமலையை ஆதரிப்பதாக தகவல் வந்துள்ளது. ஆனால், கீழ்மட்ட தொண்டர்களும் நடுநிலையாளர்களும் அதிமுகவிற்கே ஆதரவளித்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இதே போல் அறையில் உட்கார்ந்து கொண்டு தனக்கு சாதகமாக கிரியேட் செய்வதை விடுத்து, அண்ணாமலை களத்திற்கு வரவேண்டும் எனவும், இந்த கிரியேட் செய்வதை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றும், பாஜகவினர் எங்கு களத்தில் இருக்கிறார்கள் என்றும் எஸ்பி வேலுமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

Views: - 159

0

0