மாணவியின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது… அதிர்ச்சி சம்பவத்தால் பெரும் பரபரப்பு

Author: Babu Lakshmanan
23 July 2022, 8:37 am
Quick Share

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் விபத்தில் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள கணியாமூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படித்து வந்தவர் ஸ்ரீமதி. இவர், கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சட்டப்போராட்டம் நடத்திய அவரது பெற்றோர், சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்குப் பிறகு உடலை பெற்றுக்கொள்வதாக நேற்று உறுதியளித்தனர்.

அதன்படி, காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ளுமாறும், நாளை மாலைக்குள் இறுதிச்சடங்குகளை முடிக்கும்படியும் நீதிபதி சதீஷ்குமார் அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி, இன்று காலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனையில் மாணவியின் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. மகளின் உடலை கண்ணீர் விட்டு கதறி அழுதபடி பெற்றோர்கள் பெற்றுக் கொண்டனர். முன்னதாக, மாணவியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.மூர்த்தி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாவட்ட ஆட்சியர் ஷவரன் குமார் ஜடாவத், வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து மாணவியின் உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு, இறுதிச் சடங்கிற்காக சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. முன்னும், பின்னும் காவல்துறை வாகனங்கள் பாதுகாப்போடு சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியது. இதில் வாகனத்தின் முன்பகுதியில் சிறிது சேதம் ஏற்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, பெரிய நெசலூர் கிராமத்தில் அசம்பாவிதம் சம்பவங்கள் நிகழாமல் இருக்க 800க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவியின் இறுதிச்சடங்கில் உறவினர்கள், உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வெளியாட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Views: - 381

0

0