தமிழகத்தில் நாளை வழக்கம்போல் ரேஷன் கடைகள் செயல்படும்: பிப்.26ம் தேதி விடுமுறை..அரசு அறிவிப்பு…!!
Author: Rajesh29 ஜனவரி 2022, 10:11 காலை
தமிழகத்தில் நாளை வழக்கம் போல் ரேஷன் கடைகள் செயல்படும் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசு இரவு நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு அமல்படுத்தி வந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதாக கூறி தமிழக அரசு, இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு ஆகியவற்றை திரும்பப் பெற்றுள்ளது.
இதன் காரணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய கடைகளைத் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு வந்தது.
அதன்படி ரேஷன் கடைகளும் இயங்கவில்லை. தற்போது ஞாயிற்றுக்கிழமையான நாளை முழு ஊரடங்கு இல்லை என்பதால் ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படுமா? இல்லையா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஞாயிறு அன்று தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படும் பொது விநியோக திட்டத்தின்கீழ் வழக்கம் போல் செயல்படும். நாளை ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் பெறுவதற்காக நியாயவிலை கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பிப்ரவரி 26ம் தேதி நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
0
0