மாணவியின் மர்ம மரணம்… கள்ளக்குறிச்சி போராட்டத்தில் வெடித்த வன்முறை… போலீசார் மீது கல்வீசி தாக்குதல் : போராட்டக்காரர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
17 July 2022, 12:04 pm
Quick Share

கள்ளக்குறிச்சி : 12ம் வகுப்பு மாணவியின் மர்ம மரணத்தில் நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நிலையில், போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

கடலூர் – பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 13ம் தேதி மாணவி விடுதியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் மறுநாள் பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடலை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதற்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டும் என்று கோரி மாணவியின் உடலை வாங்க மறுத்து விட்டனர்.

இதனிடையே, மாணவியின் சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திடீர் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் நான்குமுனை சந்திப்பில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில், மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், மாணவி இறப்பதற்கு முன்பே உடலில் காயங்கள் இருந்ததாகவும், வலதுபுற விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், மூக்கு, வலது தோள், வலது கை, வயிறு, வயிற்றின் மேல்பகுதியில் காயம், எலும்பு முறிவு, ரத்தச்சிதைவு ஏற்பட்டிருந்தாகவும், ஆடைகளில் ரத்தக்கரை உள்ளது. பல காயங்கள் காரணமாக அதிக ரத்தப்போக்கு மற்றும் அதிர்ச்சியால் மாணவி இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி-சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்க தொடங்கினர். தொடர்ந்து செருப்பு, கண்ணாடி பாட்டில் உள்ளிட்ட பொருட்களை கொண்டு போலீசார் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவியது. தொடர்ந்து போலீசாரின் வானத்திற்கு தீ வைக்கப்பட்டது.

போராட்டம் கலவரமாக மாறியதைத் தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் நீடித்து வருகின்றது. தொடர்ந்து பள்ளியின் முகப்பின் மீது ஏறி நுழைவு வாயிலை உடைத்து உள்ளேன் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். தொடர்ந்துபள்ளியின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்களை போராட்டக்காரர்கள் சூறையாடினர்.

தற்போது போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கல்வீச்சில் காயமடைந்த போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தை நிறுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டக்காரர்களுக்கு டிஐஜி பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 435

0

0