கல்விக்காக நகைகளை அடகு வைக்கும் நிலை.. கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் தேவையா..? சீமான் கேள்வி..

Author: Babu Lakshmanan
19 May 2023, 5:16 pm
Quick Share

திருச்செந்தூர் ; நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைப்பதை திருமாவளவன் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, 2 அடி நீளமுள்ள தங்க வேலை கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- நாடாளுமன்ற தேர்தலில் வெல்வதை மட்டுமே இலக்காக கொண்டு மாநிலம் முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணம். பொதுத்தேர்வுகளில் தாய்மொழியில் குறைந்த மதிப்பெண்கள் மற்றும் குறைந்த அளவிலான தேர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாடு என பெயர் வைத்தால் மட்டும் போதுமா..? கல்வி பயில்வதற்காக நகைகளை அடமானம் வைத்து படிக்க வேண்டிய சூழல் உள்ளது.

அரசு விச சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் உதவி நிதி உதவி செய்கிறது. இதுதான் திராவிட மாடல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ரூபாய் பத்து லட்சம் நிதியுதவி விஷச் சாராயத்தை ஊக்குவிக்கிறதா..? அதிமுக ஆட்சிக்காலத்தில் விஷ சாராயம் இல்லையா..? விசிக தலைவர் திருமாவளவன் அதிமுகவுடன் இணைந்து விஷச்சாராயத்தை எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதனால் அவர்கள் தப்பித்துக்கொண்டார்கள். கள்ளச்சாராயம் நேற்று காய்ச்சி இன்று குடித்த நிகழ்வு அல்ல. பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அரசு விற்றால் சாராயம், தனியார் விற்றால் கள்ளச்சாராயமா..? திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற முடியாது.

வட மாவட்டங்களில் திமுக வெற்றி பெற்றதற்கு திருமாவளவன் தான் காரணம். அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதால் திமுகவிற்கு திருமாவளவன் தேவை. ஆதலால் திருமாவளவனை கூட்டணியில் இருந்து வெளியே விட மாட்டார்கள்.
அதிமுக பாஜக கூட்டணி இறுதியாகிவிட்டது. ஆர்எஸ்எஸ் இந்துத்துவாத்தை எதிர்க்கும் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால் எங்கே செல்வார்..?

நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைப்பதை திருமாவளவன் தான் முடிவு செய்ய வேண்டும். நாம் தமிழர் கோட்பாடுகளை ஏற்று திருமாவளவன் உட்பட யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். தமிழகத்தில் மதுவை ஒழிக்க நினைப்பவர்கள் வந்தால் மட்டுமே மதுவிலக்கு சாத்தியம் . தமிழகத்திற்கு மது கடைகளை கொண்டு வந்தவர் கருணாநிதி. மதுக்கடைகளில் இருந்து பெறும் லாபம் மூலமே இலவசங்கள் வழங்கப்படுகின்றன.

காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் வேறுபாடு இல்லை. காங்கிரஸ் கரை கட்டிய பாஜக, பாஜக காவி கட்டிய காங்…
இருவருமே ஒன்றுதான். ஊழல் பற்றி பேச காங்கிரஸ்க்கு அருகதை இல்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் மேகதாது அணை கட்டுவதை திமுகவும் திருமாவளவனும் தடுக்கமுடியுமா..? மேகதாது அணையை வைத்துதான் கர்நாடகாவில் நாடாளுமன்ற வாக்கு சேகரிப்பு நடைபெறும்.

இன்னும் ஆறு மாதத்தில் மேகதாது அணை கட்டுவார்கள் இதை தடுக்க முடியுமா..?? காங்கிரஸூம் பாஜகவும் தேசிய கட்சிகள், மாநில கட்சிகளாக மாநில உரிமை பேச முடியும். நாடு கூட்டாட்சி தத்துவத்தில் உள்ளது. மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி வரவேண்டும். மாநில கட்சிகளுக்கிடையே சுழற்சி முறையில் பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தியாவிலேயே வி.பி.சிங் ஆட்சிதான் சிறந்த ஆட்சி. மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியால் தான் சிறந்த கூட்டாட்சியை தரமுடியும், எனக் கூறினார்.

Views: - 216

0

0