ஊர் திரும்பிய கணவரை பிக்அப் செய்ய சென்ற பெண்… இரு வாகனங்களுக்கு இடையில் சிக்கி… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
27 June 2022, 6:52 pm
Quick Share

வெளியூர் சென்ற கணவரை பைக்கில் அழைத்து வர‌ பேருந்து நிலையம் சென்ற பெண் ஒருவர், இரண்டு வாகனங்களுக்கு இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியான சிசிடிவி காட்சிகள் பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரபுரம் மேற்கு மாட வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் துணி வியாபாரம் செய்து வருகின்றார். இவருக்கு பரமேஸ்வரி (37) என்ற மனைவியும் கவிதா, சந்தியா என இரண்டு மகள்களும் உள்ளனர். மூன்று தினங்களுக்கு முன்பு தன்னுடைய உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக ஆறுமுகம் (கரூர்) வெளியூர் சென்று விட்டு, இன்று விடியற்காலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்துள்ளார்.

தன்னுடைய மனைவிக்கு போன் செய்து பைக்கில் வந்து என்னை அழைத்துக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, தன்னுடைய கணவர் ஆறுமுகத்தை அழைத்து வர பரமேஸ்வரி பைக்கில் சென்று கொண்டிருந்த போது, மாநகராட்சி அலுவலகம் அருகே எதிர்திசையில் வந்த மாநகராட்சியின் குப்பை லாரி (டிராக்டர்) மீது மோதாமல் இருக்க சற்று வலதுபுறமாக செல்ல முற்பட்ட போது, பின்புறமாக வந்த கனரக வாகனம் (டிப்பர் லாரி) மோதிய விபத்தில் பரமேஸ்வரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சிவகாஞ்சி காவல்துறையினர் பரமேஸ்வரியின் சடலத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறு காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த எஸ்கேபி என்பவரின் டிப்பர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் ஆனந்தகுமாரை கைது செய்து சிவகாசி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக அப்பகுதி மக்கள் கூறுகையில், மாநகராட்சியின் குப்பை லாரி எதிர் திசையில் வந்ததாலும், பின்புறமாக கனரக வாகனம் வேகமாக வந்ததாலும் பரமேஸ்வரி இரண்டு வாகனங்களுக்கும் நடுவில் சிக்கி ஒதுங்க இடமின்றி வாகனத்தின் அடியில் மாட்டி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனதாக தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Views: - 596

0

0