‘லோன் தவணை தரோம் வாங்க’.. தனியார் நிதி நிறுவன ஊழியரின் முகத்தில் மிளகாய் பொடி தூவி சரமாரி அரிவாள் வெட்டு!!
Author: Babu Lakshmanan3 May 2024, 6:33 pm
![](https://www.updatenews360.com/wp-content/uploads/2024/05/murder-attempt-updatenews360-1024x560.jpg)
திருவள்ளூரில் தனியார் நிதி நிறுவன ஊழியர் முகத்தில் மிளகாய் பொடி தூவி மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் குமார் (27) . இவர் திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
![](https://www.updatenews360.com/wp-content/uploads/2024/05/image-74-1500x787.png)
மேலும் படிக்க: ரூ.2 லட்சம் வெட்டு… இல்லைனா வீடு கட்ட முடியாது… பணம் கேட்டு முதியவரை தாக்கிய திமுக பிரமுகர்கள்!!
இந்த நிலையில் இன்று அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் லோன் தவணை தருவதாக, அவரை திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்துள்ளனர். அங்கு தன்னந்தனியாக இருசக்கர வாகனத்தில் வந்த அஜித் குமாரை, 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர் முகத்தில் மிளகாய் பொடி தூவியும், அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளது.
அதைத் தொடர்ந்து, தன் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக வெட்டு காயங்களுடன் இரு சக்கர வாகனத்தை இயக்கி வந்த அஜித் குமார், சிறிது தூரத்தில் இரு சக்கர வாகனத்தை இயக்க முடியாமல் கீழே விழுந்த அவர், தன்னை காப்பாற்ற கோரி கூச்சலிட்டுள்ளார். அவ்வழியாக வந்த சிலர், அவர் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்த்து திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
![](https://www.updatenews360.com/wp-content/uploads/2024/05/image-76-1500x796.png)
போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அஜித் குமாருக்கு தலை, முதுகு உடல் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது. சுமார் 50 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வாங்கிய லோனுக்கான தவணை கட்ட கோரி தொந்தரவு கொடுத்ததால் அவரை வரவழைத்து தாக்கினார்களா? அல்லது வேறு ஏதாவது காரணத்தால் அவர் தாக்கப்பட்டாரா..? என்ற கோணத்தில் திருவள்ளூர் தாலுகா போலீசார் மருத்துவ மனையில் சிகிச்சையில் உள்ள அஜித்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் அவர் எதற்காக தாக்கப்பட்டார், அவர்கள் யார் என்பது குறித்து தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
![](https://www.updatenews360.com/wp-content/uploads/2024/05/image-75-1500x824.png)
பட்டப் பகலில் தனியார் நிதி நிறுவன ஊழியரை செல்போனில் பேசி வரவழைத்து, அவர் முகத்தில் மிளகாய் பொடி தூவி, அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல் தப்பியுள்ள சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![](https://www.updatenews360.com/wp-content/themes/covernews-pro/img/like30x30.png)
0
![](https://www.updatenews360.com/wp-content/themes/covernews-pro/img/dislike30x30.png)
0