கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் ‘சீரம்’ நிறுவனத்தில் தீ விபத்து: தடுப்பூசி வெளியாவதில் பாதிப்பு இல்லை..!!
21 January 2021, 4:34 pmபுனே: கொரோனா வைரசிற்கான கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் நிறுவன கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.
தடுப்பூசி போடும் பணி துவங்கிவிட்டதால் மருந்து தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் தீப்பிடித்துள்ளது. இதனால், நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேறினர்.
தீ விபத்து காரணமாக, சீரம் அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புப்படை வீரர்கள் 10 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தால் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
0
0