4 விநாடிகளில் தரைமட்டமான 8 அடுக்குமாடி கட்டிடம்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மக்கள்…பதைபதைக்கும் வீடியோ..!!
Author: Aarthi Sivakumar1 October 2021, 6:22 pm
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் மலைச்சரிவில் கட்டப்பட்டிருந்த 8 அடுக்குமாடி கட்டடம் நொடிப்பொழுதில் சரிந்து விழுந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக, இப்பகுதியில் ஆபத்தான பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேறுமாறு மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிதளவில் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. இருப்பினும் சேத விவரங்கள் குறித்து விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. பல்வேறு பகுதிகளில் மீட்புக்குழுவினர் துரித கதியில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், சிம்லாவின் காச்சிகாட்டி பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மலைச்சரிவில் கட்டப்பட்டிருந்த 8 அடுக்கு மாடிக்கட்டடம் கண்ணிமைக்கும் நேரத்தில் சீட்டுக் கட்டுபோல சரிந்து விழுந்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போரை அதிர வைத்துள்ளது.
கட்டிடத்தில் இருந்தவர்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், இடிந்து விழுந்த கட்டடத்தின் அருகே இருந்த இரு குடியிருப்பு கட்டடங்கள் பாதிப்படைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
0
0