தங்கையை கேலி செய்தவரை கண்டித்த அண்ணன்… மனைவி, மகள் கண் முன்னே ஓடஓட வெட்டிக்கொலை… மதுரையை உலுக்கிய சம்பவம்!!

Author: Babu Lakshmanan
10 March 2023, 6:32 pm
Quick Share

மதுரையில் தங்கச்சியை கேலி செய்தவரை கண்டித்த அண்ணனை, மனைவி, மகள் கண் முன்பாக ஓட ஓட விரட்டி கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பியோடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை மாநகர் யாகப்பாநகர் மீனாட்சி தெரு பகுதியை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் கூலித்தொழிலாளியான வாசுதேவன் என்பவர் தனது மனைவி ராதிகா மற்றும் 3 வயது பெண் குழந்தையுடன் சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். டைல்ஸ் ஒட்டும் வேலைக்காக, கேரள மாநிலத்திற்கு குடும்பத்துடன் சென்று அங்கு தங்கிவிட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மதுரையிலுள்ள வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

வாசுதேவனின் சகோதரி பூபதிக்கு மணிகண்டன் என்பவருடன் திருமணம் முடிந்து 3 குழந்தைகள் உள்ள நிலையில், இவர்களும் வாசுதேவனின் குடும்பத்தினருடன் கேரளாவில் பணி நிமித்தமாக தங்கியிருந்து விட்டு மதுரைக்கு திரும்பியுள்ளனர்.

இதனிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக வாசுதேவனின் சகோதரி பூபதியை அவரது கணவரான மணிகண்டனின் நண்பர் அரவிந்தன் என்பவர் கேலி கிண்டல் செய்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த வாசுதேவன் அரவிந்தனை அடித்து கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பகை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில். நேற்று இரவு தனது வீட்டின் முன்பாக வாசுதேவன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அமர்ந்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அரவிந்தன் மற்றும் 5 பேர் கொண்ட கும்பல், வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து வாசுதேவனை வெட்ட முயன்றபோது, குடும்பத்துடன் வீட்டிற்குள் சென்று கதவை சாத்தி தப்பிக்க முயன்றுள்ளார்.

ஆனால், கதவை உடைத்த கும்பல் உள்ளே புகுந்து வாசுதேவனை வெட்டியுள்ளனர். இதனையடுத்து வீட்டில் இருந்து வெளியேறிய வாசுதேவன், அங்கும் இங்கும் ஓடியபோது விரட்டி விரட்டி அந்த கும்பல் வெட்டியுள்ளனர். இதனையடுத்து அருகில் இருந்த அயர்னிங் கடைக்குள் சென்று சேருக்கு கீழ் பதுங்கிய வாசுதேவனை கண்டுபிடித்த அந்த கும்பல், அங்கேயே வைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர்.

அப்போது, வாசுதேவனின் மனைவி மற்றும் குழந்தையும் வாசுதேவனை காப்பாற்றுங்கள் என கதறியும் கூட யாரும் முன்வராத நிலையில், அந்த கும்பல் வாசுதேவனை வெட்டிவிட்டு, ‘செத்துவிட்டான் வாங்க போவோம்’ என சத்தமாக கூறிவிட்டு பொதுமக்களை அச்சுறுத்திவிட்டு அங்கிருந்து நடந்தே தப்பி சென்றுள்ளார்.

இதனையடுத்து, ரத்தவெள்ளத்தில் கிடந்த வாசுதேவனை அவரது மனைவி அங்கிருந்து பொதுமக்கள் உதவியோடு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அங்கு சில நிமிடங்களிலயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற அண்ணாநகர் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், கொலை சம்பவத்தில் தொடர்புடைய மதுரையை சேர்ந்த முத்துக்குமார், கணேஷ்பாண்டி, இந்துகுமார் ஆகிய 3 பேரை கைது செய்த நிலையில், வழக்கின் முக்கிய குற்றவாளியான அரவிந்தன் உள்ளிட்ட இருவரை தேடி வருகின்றனர்.

தனது தங்கச்சியை கேலி செய்த தங்கச்சியின் கணவரின் நண்பரை தட்டிகேட்ட அண்ணனை, மனைவி, மகள் கண் முன்பாக ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வாசுதேவனை கொலை செய்த கும்பல் கொலை செய்துவிட்டு கையில் ஆயுதங்களுடன் நடந்துசெல்லும் CCTV காட்சிகள் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுகிழமை சட்ட ஒழுங்கு குறித்து முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெற்ற நிலையில், கடந்த 5 நாட்களில் மாநகர் பகுதியில் மட்டும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்றுள்ள கொலை சம்பவங்கள் சட்ட ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது.

Views: - 373

0

0