ஜெயிலர் அவரது குடும்பப் படம்… நாங்குநேரி சம்பவம் வேறு ஒருவரின் குடும்பம் ; பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சனம்..!

Author: Babu Lakshmanan
12 August 2023, 9:40 pm
Quick Share

காவேரி விவகாரத்தில் காலம் கடந்து தற்போது தான் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று சொல்லி இருப்பதாக முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொன்விழா ஆண்டு மாநாடு வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரை வலையங்குளம் பகுதியில் நடைபெற உள்ளதையொட்டி முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- இந்த மாநாட்டுக்குப் பின் திமுக என்கிற கப்பல் ஊழல் சகதியில் சிக்கி காணாமல் போகும், எனக் கூறினார்.

சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு நடைபெற்றது அவராக நடத்திக்கொண்ட நாடகம் இன்றும் முதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- 1989 மார்ச் 25ஆம் தேதி சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்து, மார்பில் காலை வைத்து உதைத்து கொடுமைப்படுத்தி பெண் என்றும் பாராமல், ஜனநாயக படுகொலை செய்த கட்சி திமுக. மூப்பனார் கூட அதற்கு கண்ணீர் வடித்தார். ஆனால், இது எதுவும் தெரியாதது போல முதல்வர் பேசுவது பதவியில் இருக்கும் அகம்பாவத்தில் சொல்கிறார். விரைவில் அதற்கு அவர் பதில் சொல்வார், எனக் கூறினார்.

நாங்குநேரி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த கேள்வி:- அதிமுக ஜனரங்கமான கட்சி. எம்ஜிஆர், அண்ணாவின் கொள்கையை ஏற்று தொப்பி அணியாத இஸ்லாமியர், சிலுவை அணியாத கிறிஸ்தவர், பட்டையிடாத இந்து என்று தன்னை சொல்லிக் கொள்வார். அதேபோல நாங்கள் திமுகவின் ஜாதி வன்கொடுமையை கண்டிக்கிறோம், என்றார்.

மாநாட்டை புறக்கணிப்பதாக தேவர் கூட்டமைப்பு கூறியுள்ளது குறித்த கேள்விக்கு:- அதிமுகவில் இருக்கும் முக்கிய தலைவர்கள் அனைவரும் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். மக்களுக்கு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சங்கமித்து இந்த மாநாட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கிற போது, இதுபோன்ற செய்திகளை நகைச்சுவையாக தான் பார்க்க வேண்டும். முக்குளத்தூர் விரும்பும் கட்சி அதிமுக, அதிமுகவினர் விரும்புகின்ற சமுதாய மக்கள் சமுதாயம். அரசியல் நோக்கத்துக்காக சிலர் இதை பரப்புகிறார்கள், எனக் கூறினார்.

நீட் தேர்வு விவகாரத்தில் மசோதாவில் கையெழுத்திட போவதில்லை என்று ஆளுநர் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு:- உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு நீட் தேர்வு ரத்து செய்கின்ற ரகசியம் என் தந்தைக்குத் தெரியும் என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னார். மு.க.ஸ்டாலினும் நான் முதல்வரான பிறகு போடும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று சொன்னார்., என தெரிவித்தார்.

பாஜக யாத்திரையில் அதிமுகவினர் அதிகம் கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு:- பாஜக அதிமுக கூட்டணி கட்சி அவர் யாத்திரை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறார். அதிமுகவினர் மாநாட்டுப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றோம், என்றார்.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு செயல்பாடு குறித்த கேள்விக்கு:- காலம் கடந்து தற்போது தான் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். தமிழக மக்கள் சொல்வார்கள் என்பதற்காக தற்போது நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள், எனக் கூறினார்.

என்எல்சி விவகாரத்தில் திமுக நிலைபாடு குறித்த கேள்விக்கு:- திமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சியான பிறகு ஒரு நிலைப்பாடு என திமுகவுக்கு இரட்டை வேஷம் கைவந்த கலை, என்றார்.

ஓபிஎஸ், டிடிவி விலகியதால் ஓட்டு வங்கி குறையும் என்று வரும் கருத்து குறித்த கேள்விக்கு:- உலகத்தில் ஏதாவது பெரிய கட்சி, இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி அதிமுக. இரண்டு கோடி தொண்டர்களை கடந்து விட்ட கட்சி எங்களுடன் யாரையும் ஒப்பிட வேண்டாம், எனக் கூறினார்.

நெல்லை விவகாரம் மற்றும் ஜெய்லர் பட விவகாரம் குறித்த கேள்விக்கு:- ஜெயிலர் படம் அவரது குடும்ப படம் என்பதால் பாராட்டியுள்ளார். நெல்லை சம்பவம் யாரோ ஒருவர் குடும்பத்தில் நடைபெற்றது. அதனால் அதை பார்வையிட அவருக்கு மனதில்லை. இந்த மாநாட்டுக்குப் பிறகு தமிழகத்தில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படும். முதல்வரோ, அமைச்சர்களோ சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியாத மக்கள் எதிர்ப்பை சந்திக்கிற சூழல் ஏற்படும், என தெரிவித்துள்ளார்.

Views: - 287

0

0