அதிமுக நிர்வாகி திடீர் கைது… பொள்ளாச்சி டூ வேலூர் : நடந்தது என்ன? பரபரக்கும் பின்னணி!!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2023, 2:19 pm
Admk It Wing - Updatenews360
Quick Share

அதிமுக நிர்வாகி திடீர் கைது… பொள்ளாச்சி டூ வேலூர் : நடந்தது என்ன? பரபரக்கும் பின்னணி!!

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய அ.தி.மு.க ஐ.டி நிர்வாகியை, வேலூர் மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்.

கடந்த 29.03.2023 அன்று காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றும்போது, நான் நீண்ட நெடுங்காலம் தி.மு.க-வில் இருப்பவன். இனிவரும் நாள்களிலும் இருப்பேன். என்றாவது ஒருநாள் மறையப் போகிறவன். அப்போது, என் கல்லறையில் ‘கோபாலபுரத்தின் விசுவாசி இங்கு உறங்குகிறான்’ என ஒருவரி எழுதினால் போதும் என்று உருக்கமாகப் பேசினார்.

அமைச்சர் துரைமுருகன் பேசிய இந்த வார்த்தைகளை அ.தி.மு.க ஐ.டி விங் நிர்வாகியான பொள்ளாச்சி அருண்குமார் என்பவர், துரைமுருகன் புகைப்படத்தை தவறாக சித்தரித்து தனது ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.

இந்தப் பதிவு வைரலான நிலையில், காட்பாடி திமுக வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காட்பாடி காவல் துறையினர், அ.தி.மு.க ஐ.டி விங் நிர்வாகி பொள்ளாச்சி அருண்குமாரை பொள்ளாச்சியில் வைத்து கைது செய்தனர்.

பின்னர் காட்பாடி காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து வந்து காட்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

முன்னதாக பொள்ளாச்சி அதிமுக ஐ.டி விங் நிர்வாகி அருண்குமார் கைது செய்து காட்பாடி காவல் நிலையம் அழைத்து வருவதை அறிந்த வேலூர் மாநகர அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு தலைமையிலான அதிமுகவினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிமுகவினர் காவல் நிலையம் முன்பு குவிந்ததால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்த பின் ஆளும்கட்சியை எதிர்த்து கருத்து கூறுபவர்களை ஒடுக்குவதற்காக பொய்வழக்குகளை போட்டு கைது செய்வது தொடர்கதையாக உள்ளது.

இதே நிலை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்ட போது, சம்மபந்தப்பட்ட கட்சியினர் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கண்கூடு என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Views: - 275

0

0