கோவை அரசுப்பள்ளி ஆசிரியருக்கு தேசிய விருது : அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி வாழ்த்து

Author: kavin kumar
21 January 2022, 6:26 pm
Quick Share

கோவை: சாராபாய் ஆசிரியர் – விஞ்ஞானி தேசிய விருது போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற கோவை அரசுப்பள்ளி ஆசிரியை யுவராணிக்கு அதிமுக கொறடா எஸ்பி வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும், ஆசிரியர் – விஞ்ஞானி தேசிய கவுன்சில், தொடக்க கல்வி மாணவர்களுக்கு செயல்வழியில் கணிதம், அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் போட்டி நடத்தி விருது வழங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டிற்க்கான சாராபாய் ஆசிரியர் – விஞ்ஞானி தேசிய விருது போட்டிக்கு ஆன்லைன் தேர்வு நடத்தி கருத்துருக்கள் பெறப்பட்டன. பின்னர், நேர்காணல் வாயிலாக தகுதியானோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் கோவை மாவட்டம் பொம்மனம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை யுவராணிக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.இதுகுறித்து ஆசிரியை யுவராணி கூறுகையில், ”புதிய பாடத்திட்டத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க 250க்கும் மேற்பட்ட அனிமேஷன் வீடியோக்கள் உருவாக்கியுள்ளதாகவும், இந்த செயல்வழியில் மாணவர்களுக்கு விளக்கும்போது, மனதில் கருத்துகள் அழியாமல் பதிந்து விடுவதாக கூறிய அவர், விருதுக்கு தேர்வாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக தெரிவித்தார். இந்த நிலையில் சாராபாய் ஆசிரியர் – விஞ்ஞானி தேசிய விருது போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற கோவை அரசுப்பள்ளி ஆசிரியை யுவராணிக்கு தொண்டாமுத்தூர் எம்எல்ஏவும், அதிமுக கொறடாவுமான எஸ்பி வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-மத்திய அரசின் “சாராபாய் ஆசிரியர் – விஞ்ஞானி தேசிய விருது” போட்டியில், இரண்டாம் பரிசு வென்றுள்ள கோவை, பொம்மனம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை திருமதி. யுவராணி அவர்களுக்கு பாராட்டுகள்!. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் உங்களின் பல்வேறு கண்டுபிடிப்புகள் மூலம், தாங்கள் மேலும் பல விருதுகளை பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Views: - 3274

0

0