20 மணி நேரத்தில்,… எடப்பாடி சொன்ன ஒரு வார்த்தைக்காக அண்ணாமலை கிரீன் சிக்னல்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 November 2022, 7:27 pm
annamalai -updatenews360
Quick Share

2024 லோக்சபா தேர்தலுக்காக நாடு முழுக்க பல்வேறு கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் திமுக இதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

தென் மண்டலத்தில் முக்குலத்தோர் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் வாக்குகளை கவர்வதற்காக திமுக தீவிரமாக பணிகளை செய்து வருகிறது. அதேபோல் கொங்கு மண்டலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து வருகிறார்.

அதிமுகவில் கடந்த சில மாதங்களாக உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ பன்னீர்செல்வத்திற்கும் இடையில் ஒற்றை தலைமை விவகாரத்தில் மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி பெரிதாக கூட்டணி குறித்து , தேர்தல் குறித்தெல்லாம் கருத்து தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் பிரம்மாண்ட கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக உறுதியாக தெரிவித்து உள்ளார். எடப்பாடி பழனிசாமி இப்படி சொன்னதும்.. உடனே கூட்டணி குறித்த பல்வேறு விவாதங்கள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எழுந்தது.

அதன்படி பாஜக – அதிமுக – தேமுதிக – புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி வைக்கலாம் என்று பல்வேறு வாதங்கள் இணையத்தில் வைக்கப்பட்டன. அமமுக கூட இந்த கூட்டணியில் இணையும் வாய்ப்புகள் உள்ளதாகவும் விவாதங்கள் எழுந்தன. இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கருத்து தெரிவித்து இருந்தார்.

திமுகவிற்கு எதிராக கூட்டணி அமைப்போம். நாங்கள், திமுகவுக்கு எதிரான கூட்டணி அமைப்பதற்கு எப்போதும் நேசக்கரம் நீட்டுவோம். திமுக என்ற தீய சக்தியை வீழ்த்துவதற்காக தயாராக இருக்க வேண்டும்.

யாராக இருந்தாலும், என்னவாக இருந்தாலும், எங்கே இருந்தாலும் சரி, மெகா கூட்டணி அமைக்கிறவர்களாக இருந்தாலும் சரி நாம் கூட்டணி அமைத்தால்தான் திமுக என்ற தீய சக்தியை வீழ்த்திய முடியும் என்று டிடிவி தினகரன் பேசி உளளார். எடப்பாடி பேசிய மறுநாளே டிடிவி தினகரன் மெகா கூட்டணி பற்றி பேசியது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது.

பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த கூட்டணியை வரவேற்று பேசி உள்ளார். எடப்பாடி பேசிய வெறும் 20 மணி நேரத்தில் அண்ணாமலை இதை வரவேற்றுள்ளார். அதில் அதிமுக தலைமையில் செயல்பட நாங்கள் தயார். இதில் எந்த குழப்பமும் இல்லை.

அதிமுக பெரிய கட்சி. அவர்கள் தலைமையில் நாங்கள் செயல்பட தயார். 2024 தேர்தல் மிக முக்கியமானது. இந்த தேர்தலில் நாங்கள் பல கட்சிகளுக்கு முடிவுரை எழுதுவோம். யார் பலமான கட்சி என்பது அந்த தேர்தலில் நாங்கள் நிரூபிப்போம், என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையின் இந்த பேட்டியை தொடர்ந்து அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் எல்லாம் இணையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பான ஒவ்வொரு நிகழ்வையும் திமுக இன்னொரு பக்கம் கவனித்து வருகிறது.

கண்டிப்பாக திமுக கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் கட்சிகளை இழுக்க பாஜக – அதிமுக முயலும். ஏற்கனவே புதிய தமிழகம் பாஜகவுடன் நெருக்கமாகி வருகிறது. இதனால் அதிமுக – பாஜகவின் மூவ்களையும் திமுக தீவிரமாக கவனித்து வருகிறது.

Views: - 503

0

0