3 வயது சிறுமி பலாத்காரம் செய்து எரித்து கொலை.. தீவிபத்து போல் நாடகமாடிய காமுகன் கைது : கோவையில் அதிர்ச்சி!!

Author: Babu Lakshmanan
18 February 2022, 12:09 pm
Quick Share

கோவை : கோவை அருகே 3 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அருகே சூலூரை அடுத்த நடு அரசூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவருக்கு 3 வயது மகள் இருந்தார். சிறுமியின் தாய் வேலைக்கு சென்றுவிட நேற்று மதியம் வீட்டில் சிறுமியும், அவரது தந்தையும் மற்றும் தந்தையின் நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த தனசேகர் (30) என்பவரும் இருந்தனர்.

இதனிடையே சிறுமியின் தந்தையும் தனசேகரும் மது அருந்த திட்டமிட்டனர். முன்னதாக இருவரும் கஞ்சா புகைத்துள்ளனர். தொடர்ந்து சிறுமியின் தந்தை மளிகை சாமான்கள் வாங்க கடைக்குச் சென்றார்.

தனசேகரும் சிறுமியும் மட்டுமே வீட்டில் இருந்தனர். சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து கருகிய வாடை வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அந்த சிறுமி இடுப்பு பகுதிக்கு கீழே முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். அருகிலேயே தனசேகர் லேசான தீக்காயத்துடன் கிடந்தார்.

அந்த நேரத்தில் சிறுமியின் தந்தையும் வீட்டுக்கு திரும்பினார். மகள் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் தனசேகரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்த பின்னர் தனசேகரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றதும், பலாத்காரம் செய்ததை மறைக்க சிறுமியை கொலை செய்த பின்னர் வீட்டில் இருந்த துணிகளை எடுத்து குழந்தையின் உடலில் மேல் போட்டு தீ வைத்துள்ளதும் தெரியவந்தது.

மேலும், இதனை தீ விபத்து போன்று காட்டுவதற்காக வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டரில் தீ வைத்த போது அவர் மீதும் தீப்பற்றியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 892

0

0