கோவை மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்பு : கவுன்சிலர்களின் கல்வி தகுதி என்ன ?

Author: Rajesh
2 March 2022, 5:52 pm
Quick Share

கோவை: கோவை டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் கோவை மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்றனர். மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடந்தது. இதில், கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 778 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், 372 பெண் வேட்பாளர்கள் ஆவர். வாக்கு எண்ணிக்கை கடந்த மாதம் 22-ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியினர் அமோக வெற்றி பெற்றனர்.

அதன்படி, மொத்தம் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளை கைப்பற்றியது. மேலும், அதிமுக 3 வார்டுகளிலும், எஸ்.டி.பி.ஐ ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன. இந்நிலையில், மாநகராட்சி 100 வார்டுகளில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்பு கூட்டம் மாநகராட்சி கட்டிடத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் காலை 10 மணியளவில் நடந்தது.

மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா பதவிபிரமாணம் செய்து வைத்தார். மேலும், பதவியேற்ற கவுன்சிலர்களில் 3 பேர் 30 வயதிற்கும் குறைவானவர்கள் ஆவர். இதில், 97வது வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் நிவேதா சேனாதிபதி இளம் வயது கவுன்சிலர் ஆவார்.

இவரின் வயது 22 ஆகும். மேலும், வெற்றி பெற்ற கவுன்சிலர்களின் சராசரி வயது 47ஆக உள்ளது. இது தவிர, 25 கவுன்சிலர்கள் இளநிலை பட்டப்படிப்பும், 13 கவுன்சிலர்கள் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளனர். ஒருவர் பி.எச்.டி., முடித்துள்ளார்.

மேலும், 54 பேர் பிளஸ்2 அல்லது அதற்கும் குறைவான கல்வி அறிவை பெற்றுள்ளனர். 7 கவுன்சிலர்கள் அடிப்படை கல்வி பெறாதவர்கள் ஆவர். 55 பெண் கவுன்சிலர்கள் உள்ளனர்.

மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் வரும் 4ம் தேதி நடக்கிறது. இந்த மறைமுக தேர்தல் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மாநகராட்சி விக்டோரிய ஹாலில் நடக்கிறது.

Views: - 1312

0

1