தொடரும் கனமழை… நிரம்பும் அணைகள் : ஒரே நாளில் 3 அடி உயர்ந்த பவானிசாகர் அணை.. விவசாயிகள் மகிழ்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
15 July 2022, 9:07 am
Bhavani Sagar Dam - Updatenews360
Quick Share

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் முக்கிய நீராதரமாக விளங்கும் பவானிசாகர் அணை 15 அடி உயரமும் 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 2,47,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் நேற்று 90 அடியை எட்டியது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து 20,449 கன அடியாக அதிகரித்து ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து தற்போது அணை 93 அடியை தாண்டி உள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருவதால் அணையின் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 93.10 அடியாகவும், நீர் இருப்பு 23.66 டி.எம்.சி ஆகவும், நீர் வரத்து வினாடிக்கு 20449 கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன் கோட்டை வாய்க்கால் பாசத்திற்கு 900 கன அடி நீர், கீழ் பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி நீர் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடி நீர் என மொத்தம் 1005 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

Views: - 633

0

0