அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு : சாலை மறியல்… பாஜகவினர் குண்டுக்கட்டாக கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
15 July 2022, 10:39 am
Minister Home Bjp - Updatenews360
Quick Share

விருதுநகரில் அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் பாலவனநத்தம் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் இலவச ஆடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போது விருதுநகர் பாலவனநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கலாவதி என்ற பெண், அமைச்சரிடம் தன் தாய்க்கு முதியோர் உதவித் தொகை கேட்டு மனு அளித்தார்.

அப்பொழுது வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அந்த மனுவினை வைத்து அந்தப் பெண்மணி தலையில் அடித்ததாக சமூகவலைத் தலங்களில் வீடியோ வைரலாக பரவியது.

இந்த சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனங்களை பதிவு செய்ததுடன், மக்கள் என்ன உங்கள் அடிமைகளா என பதிவிட்டு அமைச்சர் பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் வீட்டை முற்றுகையிடுவோம் என எச்சரித்திருந்தார்.

இதையடுத்து நேற்று அந்தப் பெண்மணி கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் என்னை அடிக்கவில்லை என்றும் செல்லமாகத்தான் தலையில் தட்டினார் என்றும் பேட்டி கொடுத்தார்.

ஆனால் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் விருதுநகர் – மதுரை ரோட்டில் உள்ள பத்திர பதிவு அலுவலகம் முன்பு கூடி இருந்தனர். அப்பொழுது காவல்துறையினர் அவர்களை கைது செய்ய முயன்றனர்.

அப்பொழுது காவல்துறையினருக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு இருந்தவர்களை குண்டுகட்டாக காவல்துறையினர் கைது செய்தனர்,

அதனை தொடர்ந்து கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் கைது செய்யப்பட்ட வேனை எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்

Views: - 484

0

0