‘மின்கம்பம் உடைஞ்சதால பயிர் எல்லாம் வாடுது’… குறைதீர் முகாமில் விவசாயி கவலை… சிரித்தபடி பதிலளித்த மின்வாரிய அதிகாரி ; கடுப்பான ஆட்சியர்..!!

Author: Babu Lakshmanan
4 August 2023, 4:34 pm
Quick Share

காஞ்சிபுரம் ; மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாய நிலையத்தில் உள்ள மின்கம்பங்கள் துண்டாக உடைந்தும் நடவடிக்கைகள் எடுக்காததை பற்றி கேள்வி எழுப்பிய விவசாயிக்கு கேலியும் கிண்டலுமாக பதில் சொன்ன மின்வாரிய அதிகாரியால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

ஏரிகள் நிறைந்த மாவட்டம் என கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாயம் பயிரிடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக உத்திரமேரூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது.

உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பாஞ்சாலம் என்பவரின் நிலம் அருகே உள்ள 12க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் 3 மாதத்திற்கு முன்பு பெய்த மழையின் காரணமாக நிலத்தில் துண்டாகி விழுந்துள்ளது.

அதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உண்டாகியது. பாஞ்சாலம் என்பவரின் 8 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல்கதிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்து போனது.

இது தொடர்பாக விவசாயி பாஞ்சாலம் என்பவர் உத்திரமேரூர் மின்சார துறைக்கு பலமுறை கடிதம் கொடுத்தும் செயற்பொறியாளர் ஜானகிராமனும், உதவி செயற்பொறியாளர் அழகர்சாமி ஆகியோரும் செவிடன் காதில் ஊதிய சங்காக எதையும் கண்டுகொள்ளாமல் விவசாயிகளை அலட்சியப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

கோடை வெயிலில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல்கதிர்கள் காய்ந்து போனதால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி பாஞ்சாலம், 15 ஆயிரம் ரூபாய்க்கு மின் வயர்கள் வாங்கி வந்து வேறொரு பகுதியிலிருந்து மின்சாரம் எடுத்து தற்போது தண்ணீர் பாய்ச்சி வருகிறார்.

மூன்று மாத காலமாக மின் கம்பங்கள் உடைந்து சாய்ந்து உள்ள நிலையில், பலமுறை மனு கொடுத்தும் அசையாத மின்வாரியத் துறையினரின் அலட்சியத்தை, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் பெருமாள் என்ற விவசாயி புகார் அளித்தார்.

மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், மின்வாரியத்துறை சார்பில் கூட்டத்திற்கு வந்திருந்த காஞ்சிபுரம் ஒலிமுகமது பேட்டை மின்வாரிய உதவி செயல் பொறியாளர் மோகனிடம், இந்த பிரச்சனை எப்போது முடிப்பீர்கள் என்று கேட்டதற்கு, மோகன் என்ற செயல் பொறியாளர், விவசாயி பெருமாளை பார்த்து கேலியும், கிண்டலமாக சிரித்தப்படியே பதில் கூறியுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சி உற்ற மாவட்ட ஆட்சியர் , “விவசாயிகளின் பிரச்சனை சிரிப்பாக உள்ளதா? என கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.

இதனால் கூட்டரங்கிள் இருந்த பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் மிகவும் அதிர்ச்சி உற்றனர். விவசாயிகளின் பிரச்சனையை உடனுக்குடன் முடித்துத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மின்வாரியத் துறையினருக்கு உறுதியான எச்சரிக்கை விடுத்தார். இதனால் சற்று நேரம் கூட்டரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 299

0

0