ஓடும் பேருந்தில் இருந்து தள்ளி விட்டு 5 மாத கர்ப்பிணி கொலை.. குடிபோதையில் இருந்த கணவன் வெறிச்செயல்!!

Author: Babu Lakshmanan
30 January 2024, 9:34 am
Quick Share

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குடி போதையில் 5 மாத கர்ப்பிணி மனைவியை ஓடும் பேருந்திலிருந்து கீழே தள்ளி கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைமெய்யன் மகன் பாண்டியன் (வயது 24) என்பவருக்கும், நத்தம் கல்வேலிபட்டியை சேர்ந்த பாலமுருகன் மகள் வளர்மதி (வயது 18) என்பவருக்கும், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. தற்போது வளர்மதி 5 மாத கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் திண்டுக்கல்லில் இருந்து பொன்னமராவதி நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் கணவன் மனைவி இருவரும், கோபால்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து ஏறி நத்தம் கல்வேலிபட்டியில் உள்ள வளர்மதியின் தந்தையிடம் இருசக்கர வாகனம் வாங்குவதற்காக நத்தம் நோக்கி சென்றுள்ளனர்.

பாண்டியன் மது போதையில் இருந்ததாகவும், கணவன் மனைவி இடையே பேருந்துக்குள் வாக்குவாதம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது, கணவாய்பட்டி ஒத்தக்கடை அருகே உள்ள பாச்சா கடை என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் பின்பக்க படிக்கட்டில் இருந்து பாண்டியன் அவரது மனைவியை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த வளர்மதி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பேருந்தில் குறைந்த அளவிலேயே பயணிகள் இருந்ததாலும் அனைவரும் பேருந்தின் முன் பகுதியில் அமர்ந்திருந்ததால் யாரும் இச்செயலை கவனிக்கவில்லை. மனைவியை தள்ளி விட்டு கொலை செய்த கணவனே பேருந்தின் முன் பகுதிக்கு சென்று, எனது மனைவியை நான் கீழே தள்ளி விட்டேன் பேருந்தை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் பதற்றமடைந்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி சாணார்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாணார்பட்டி காவல்துறையினர் இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாணார்பட்டி போலீசார் பாண்டியனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கட்டிய மனைவியை கணவனே பேருந்தில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 375

0

0