பட்டியல் இனத்தவர் புதியதாக கட்டிய வீட்டை இடித்து தள்ளிய வேறு சமூகத்தை சேர்ந்தவர் : அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2023, 3:58 pm
House Demolish - Updatenews360
Quick Share

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தெல்லனஅள்ளி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் (36) தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்.

இவர் தெல்லனஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே புதிதாக வீட்டு மனை வாங்கி அதில் வீடு கட்டி வருகிறார். இப்பகுதியில் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசித்து வருவதால் இவர் வீடு கட்டி வருவதை பிடிக்காத அப்பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் முனுசாமி என்பவர் இப்பகுதியில் நீ வீடு கட்ட கூடாது என வேல்முருகனிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஆனால் வேல்முருகன் வீடு கட்டும் பணியை தொடர்ந்து செய்து வந்ததால்,ஆத்திரமடைந்த முனுசாமி நேற்றிரவு சுமார் 10 க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் ஜே.சி.பி.எந்திரத்தை கொண்டு சென்று வேல்முருகன் கட்டி வரும் வீட்டை இடித்து தரைமட்டமாக்கினார்.

சத்தம் கேட்ட வேல்முருகன் இவர்கள் இடிப்பதை கண்டு ஓடி சென்று அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்,அவர்கள் வருவதை அறிந்தவர்கள் தப்பியோடி தலைமறைவாகினர்.

இதுகுறித்து வேல்முருகன் இன்று காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்,புகாரின் பேரில் காரிமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தெல்லனஅள்ளியை சேர்ந்த கோவிந்தன் (48), அண்ணாமலை (வயது 54) ஆகிய இருவரையும் கைது செய்து காரிமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள முனுசாமி (67), வினோத் (26) ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். சாதிய வன்மத்தால் வீட்டை இடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 351

0

0