2 மகள்களை கொன்று விட்டு தாய் குடும்பத்தோடு தற்கொலை… சிக்கியது உருக்கமான கடிதம் ; அதிர்ச்சியில் அஞ்சுகிராமம்..!!

Author: Babu Lakshmanan
10 August 2023, 5:01 pm
Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே 2 மகள்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன். இவரது மனைவி அனிட்டா (வயது 46). இவர்களுக்கு சகாய திவ்யா(19), சகாய பூஜா மெளலியா (16) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கணவர் ஏசுதாசன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இரண்டு மகள்களையும் அனிட்டா வளர்த்து வந்தார்.

சகாய திவ்யா அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.இ. இரண்டாம் ஆண்டும், சகாய பூஜா மௌலியா அழகப்பபுரத்தில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று வழக்கம்போல் இரவு சாப்பிட்டுவிட்டு 3 பேரும் தூங்க சென்றனர். இன்று அதிகாலையில் அனிட்டா வீட்டிற்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் வந்துள்ளார். அப்போது, அனிதாவின் வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது.

சிறிது நேரம் கழித்து மற்றொரு நபர் வந்தபோதும் கதவு பூட்டப்பட்டிருந்தது. வழக்கமாக காலையிலேயே அனிட்டாவின் வீட்டில் கதவு திறக்கப்படும். இன்று நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் அந்த பகுதியினிடையே சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது, அனிட்டா மற்றும் அவரது 2 மகள்களும் தூக்கில் பிணமாக தொங்கினார்கள். 3 பேரும் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்தனர்.

தூக்கில் பிணமாக தொங்கிய அனிட்டா, சகாய திவ்யா, சகாய பூஜா மெளலியா ஆகிய 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 மகள்களையும் தூக்கில் தொங்கவிட்டு கொன்று, அனிட்டா தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை. அது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் அனிட்டா எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால், குழந்தைகளை சரிவர கவனிக்க முடியவில்லை என்றும், இதனால் ஏற்பட்ட மனவருத்தத்தில் குடும்பத்தோடு தற்கொலை செய்வதாகவும், எங்கள் சாவுக்கு வேறுயாரும் காரணமில்லை என்றும் எழுதியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 3 பேர் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அனிதா கணவன் இறந்த பிறகு மகள்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்துள்ளார். பணப்பிரச்சனை அவருக்கு இருந்து வந்துள்ளது. இதனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்து வருகிறது.

மகள்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அஞ்சுகிராமம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 331

0

0